You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டொனால்டு டிரம்ப் பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா வருகிறார்
டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக வரும் 24ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.
"அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் பிப்ரவரி 24-25 தேதிகளில் இந்தியாவுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க உள்ளனர்" என்று இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபரின் இந்த பயணம், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை மென்மேலும் பலப்படுத்தும் என்றும், இருநாட்டு மக்களுக்கிடையே இருக்கும் வலுவான மற்றும் நீடித்த பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமையும் என்றும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 16ஆம் தேதியன்று, அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து இருநாட்டு அதிகாரிகளுக்கிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டம் ஒன்றில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் சேர்ந்து பங்கேற்றார். அப்போது, டிரம்ப் தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வருமாறு மோதி அழைப்பு விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்க அரசின் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, டிரம்பை சந்தித்து அவரை இந்தியா வருமாறு மீண்டும் வலியுறுத்தினர்.
அமெரிக்காவின் 45ஆவது அதிபராக 2017ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அதன் பிறகு இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: