நிர்பயா வழக்கு: அக்ஷய் குமாரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Hindustan Times via getty images
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான அக்ஷய் குமார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிபதி ஆர்.பானுமதி மற்றும் அஷோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு மீது இன்று (புதன்கிழமை) விசாரித்து தீர்ப்பை வழங்கியது.
இதனிடையே, உச்ச நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளின் மறு ஆய்வு மனுக்களையும் நிராகரித்துள்ளதால் தாங்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய விரும்புகிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டி ஒரு வார கால நோட்டீஸ் அளிக்குமாறு நிர்பயா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறை அதிகாரிகளுக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது .
இதைக் கேட்டு நிர்பயாவின் தயார் ஆஷா தேவி நீதிமன்ற அறையிலேயே அழத் தொடங்கினார். குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து எங்களிடம் கூறப்படுகிறது. ஆனால், ஏழு ஆண்டு காலமாக நாங்கள் நீதிக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் எங்கு செல்வது என்று அவர் அப்போது கேட்டார்.
அப்போது, "உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு உயிர் போயுள்ளது எனக்குத் தெரியும். எனினும், குற்றவாளிகளுக்கும் உரிமைகள் உள்ளன. உங்கள் தரப்பையும் நாங்கள் கேட்பதோடு, சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும், " என்று நீதிபதி சதீஷ் குமார் அரோரா அவரிடம் தெரிவித்தார்.
அக்ஷய் குமார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங், "இந்த வழக்கில் அரசியல், ஊடக அழுத்தம் இருந்தது," என்று வாதிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய தங்களுக்கு மூன்று வார காலம் அவகாசம் வேண்டும் என்று ஏ.பி.சிங் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
எனினும் சட்டப்படி ஏழு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க முடியும் என்று அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
குற்றம் நிரூபணம் செய்யப்பட்ட ராம்சிங் டெல்லியில் உள்ள திகார் சிறையில் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அக்ஷய் குமார் உடன் கைதான முகேஷ் சிங், வினய் சர்மா மற்றும் பவன் குமார் ஆகியோரது மறு ஆய்வு மனுக்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று இந்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தாம் விலகுவதாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்த மனு இன்றைக்கு விசாரிக்கப்படும் என்று கூறி ஒத்திவைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
நடந்தது என்ன?
கடந்த டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சம்பவத்தில் அவருடைய நண்பரும் தாக்கப்பட்டார்.
மிகவும் மோசமாக காயமடைந்த அம்மாணவியை சாலையோரம் அக்கும்பல் தூக்கி எறிந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 13 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.
நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை
2012 டிசம்பர் 16: டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.

பட மூலாதாரம், AFP
2012 டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
2012 டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.
2013 மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2013 ஆகஸ்டு 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.
2013 செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
2017 மே: டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
பிற செய்திகள்:
- 5ஜி, செயற்கை நுண்ணறிவு: 2020இல் நடக்கப்போகும் தொழில்நுட்ப பாய்ச்சல்கள் என்னென்ன?
- மலேசிய உச்சி மாநாட்டில் பங்கேற்காத இம்ரான்கான்: சௌதி நிர்பந்தம் காரணமா?
- குடியுரிமை சட்டத் திருத்தம்: சென்னை பல்கலைக்கழகத்தில் வலுக்கும் போராட்டம்
- மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி: யார் இந்த முஷாரஃப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












