You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடியுரிமை திருத்த சட்டம்: டெல்லியில் மீண்டும் போராட்டம்
கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மீண்டும் டெல்லியில் போராட்டம் தொடங்கி உள்ளது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கற்களைக் கொண்டு தாக்கினர்.
போலீஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
போராட்டத்தை அடுத்து சீலாம்பூர் முதல் ஜாஃப்ரா வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
போலீஸார் ட்ரோன்களை பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் கண்காணித்தனர்.
தமிழகத்தில் போராட்டம்
இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக இன்று (செவ்வாய்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.
காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "இதுவரை இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான் பாஜக அரசு இருந்துவருகிறது என்று நினைத்து வந்தோம். ஆனால், இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு பிறகு அவர்கள் இலங்கை தமிழர்களுக்கும் எதிராக உள்ளார்கள் என்று தெரிய வருகிறது.'' என்றார்.
விரிவாகப் படிக்க:'குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா?' - மு. க. ஸ்டாலின்
"இலங்கை இந்துவுக்கு ஏன் இல்லை?"
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்திருக்கும் கமல்ஹாசன், "பாகிஸ்தான் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை இலங்கை இந்துவுக்கு ஏன் இல்லை?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார். எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு பதில் இல்லையென்றும் அவர் கூறியிருக்கிறார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை குறித்தும், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தில் வாய்ப்பளிக்காதது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
கிராமங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து செத்துக்கொண்டிருக்கும்போது அதைத் தடுக்க வழிசெய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசின் சூழ்ச்சி என்றும் பெண்கள் உயிர் பயத்தில் வாழும் நேரத்தில் அதை சரிசெய்யாமல், வாக்கு வங்கிக்காக சட்டப்பிழைகளைச் செய்வது அரசு மக்களுக்கு எதிராகத் தொடக்கும் போர் என்றும் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: