மாமல்லபுரத்தில் மோதி - ஜின்பிங்: வெள்ளிக்கிழமை என்ன நடந்தது? - 10 தகவல்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான முறைசாரா சந்திப்பிற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் வெள்ளிக்கிழமை மதியம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

"அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே! இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் குறிப்பிட்டார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்பட்டு மாமல்லபுரம் சென்றார் ஷி ஜின்பிங். அங்கு என்ன நடந்தது?

1.மாலை 5 மணி அளவில், மாமல்லபுரத்தை சென்றடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார்.

2.தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்திருந்தார் பிரதமர் மோதி.

3.இந்தியப் பிரதமருடன் இணைந்து அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டார் சீன அதிபர்.

4.அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரை கோவில் ஆகிய வரலாற்றுச் சின்னங்களின் முக்கியத்துவத்தை பிரதமரே சீன அதிபருக்கு விளக்கிச் சொன்னார்.

5.அதனைத் தொடர்ந்து இருவரும் அமர்ந்து இளநீர் பருகினார்கள்.

6.இதற்கு பிறகு கடற்கரை கோவிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் கண்டுகளித்தார்கள்.

7.இந்த நிகழ்ச்சியை சென்னையில் உள்ள கலாஷேத்ராவை சேர்ந்த குழுவினர் நடத்தினார்கள்.

8.இதனையடுத்து இருநாட்டுத் தலைவர்களுக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

9.இந்த இரவு விருந்தில் தமிழக உணவுகளும் சீன உணவுகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

10.இரவு உணவில் தக்காளி ரசம், சாம்பார், கவனியரிசி அல்வா உள்ளிட்ட தமிழக பாரம்பரிய உணவுகள் இருக்கும் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது. செட்டிநாடு உணவு வகைகளும் இருந்ததாக தெரிகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :