You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் விவகாரம்: திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சித்தலைவர்கள்
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நிலையில், அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து திமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் 14 கட்சிகள் பங்கேற்கின்றன.
திமுக எம்பிக்கள் டி.ஆர் பாலு, திருச்சி சிவா, தயாநதி மாறன், வில்சன், சு.வெங்கடேசன் உள்ள பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வசந்த குமார், கே.எஸ் அழகிரி உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் இதில் சிறிது நேரம் வந்து சென்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் ஆகியோரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ப.சிதம்பரம் கைது - 'அரசியல் பழிசவாங்கும் நடவடிக்கை'
"சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து சிதம்பரத்தை கைது செய்ததை நானும் பார்த்தேன். இது அவமானகரமானது. இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரியிருந்தார். ஆனால், அதற்குள் அவர் கைது செய்யப்பட்டார். இது கண்டிக்கத்தக்கது" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"திமுக போராட்டம் நடத்துவது ஏன்?"
இது குறித்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், "காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியே நாங்கள் போராட்டம் நடத்த இருக்கிறோம். அரசமைப்பு சட்டப்பிரிவு 370 விவகாரத்தை பொறுத்தவரை, அதுகுறித்து அம்மாநில மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களே முடிவெடுக்க வேண்டும். அது மத்திய அரசின் முடிவாக இருக்கக் கூடாது. அந்த சட்டமும் அதைத்தான் சொல்கிறது. ஆனால், அந்த சட்டத்தை மத்திய அரசு உடைத்துள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, உமர் அப்துல்லா, அவருடைய மகன் மற்றும் காஷ்மீரை சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை கைது செய்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்குள் செல்ல முடியவில்லை. கம்யூனிஸ்ட் தலைவர்கள் அங்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறார்கள்.
அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கு முன்பு காஷ்மீரில் நடந்த கூட்டணி ஆட்சியில் பாஜக இடம்பெற்றிருந்தது. அப்போது அங்கே தொழில் வளர்ச்சியை பெருக்கி இருக்கலாம். மாணவர்களுக்கு உதவிகரமாக சட்டங்களை இயற்றி இருக்கலாம். ஆனால், அவர்கள் அப்போது எதுவும் செய்யவில்லை, என்று கூறினார் இளங்கோவன்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்திற்கு, அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். அனைவரும் எங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். முத்தலாக் தடை சட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக கருத முடியாது. அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், முஸ்லிம் மதத் தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். இதேபோன்றதொரு சட்டம் 1961இல் பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டபோது, இருபாலினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
நீதிமன்றம் முத்தலாக் தவறு என்று தான் கூறியுள்ளதே தவிர விவாகரத்தே தவறு என்று கூறவில்லை. அவர்கள் வேறெதாவதொரு மாற்றுச் சட்டம் கொண்டு வர வேண்டும். பாஜகவினர் சில சமூகத்திற்கு ஆதவரவாக செயல்படுகின்றனர். நாட்டின் மதசார்பற்ற தன்மையை குலைகின்றனர். இதற்கு ஒரு முடிவு வேண்டும்.
அரிசி விலை உயர்த்தப்பட்டால் அதற்கு மானியம் கொடுக்கப்பட்டு அதன் விலை கட்டுப்படுத்தப்படுவது போல, சாமானிய மக்கள் பாதிக்கப்படாதவாறு பாலின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்" என்று கூறி இருந்தார்.
எதிர்ப்பு
இப்படியான சூழலில், திமுக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி நாடாளுமன்ற சாலை காவல் சரக துணை ஆணையர் அலுவலகத்தில் வழக்குரைஞரும், தேமுதிகவின் தில்லி செயலருமான ஜி.எஸ்.மணி மனு செவ்வாய்க்கிழமை அளித்து இருந்தார்.
அந்த மனுவில், "திமுக உள்ளிட்ட கட்சிகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற வகையில், இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, அரசியல் தலைவர்கள் வீட்டு சிறைபிடிப்பு, இன்டர்நெட் சேவை ரத்து, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, பயங்கரவாத செயல் முறியடிப்பு போன்ற விவகாரங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
ஆகவே, அது தொடர்பான விவகாரங்களில் போராட்டம் நடத்துவது உச்சநீதிமன்ற நீதி வழங்கும் நடைமுறைகளுக்கு எதிரானது. மேலும், இப்போராட்டம் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களிடையே பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை நாடு முழுவதும் உருவாக்கும் வகையிலும், எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா போன்றவற்றை ஊக்குவிக்கின்ற வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் இருக்கும் என்பதால், இப்போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிடப்படி ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று கூறி இருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்