You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளா வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, குஜராத் மாநிலங்கள் மற்றும் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புகளால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மட்டும் இதுவரை 72 உயிரிழந்துள்ளனர். 58 பேரை காணவில்லை. வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல பகுதிகளுக்கு சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் அவசரகால நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"வெள்ளம் மற்றும் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டதால் 80-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் இருப்பதாக" போலீஸ் செய்தித் தொடர்பாளர் பிரமோத் குமார் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
வரும் நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதால், சாலை வசதி துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க ராணுவம் முயற்சிக்கிறது.
கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 200 பேர் உயிரிழந்தனர்.
அதே போல கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலும் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி, கோவை, வால்பாறை ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக அதிக அளவு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்களுக்கு தென் மேற்கு பருவமழை இருக்கும்.
ஆனால், இந்த வருடம் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் சற்று தாமதமாக தொடங்கிய பருவமழை சரிவர பெய்யவில்லை. அவ்வப்போது மிகக் குறைந்த அளவு மழை மட்டுமே இருந்தது.
கடந்த ஐந்து நாட்களாகத்தான் பருவமழை மீண்டும் தொடங்கியுள்ளது. சீரான இடைவெளியில், பெய்யும் பருவமழை தற்போது ஒரே நேரத்தில் அதிகமாக பெய்துவருகிறது.
தொடர் கனமழையின் காரணமாக இந்தப் பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் மண்சரிந்தும், மரங்கள் விழுந்தும் கிடப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள் பலவற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்