You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கும்பல் கொலைகளுக்கு எதிராக இயக்குநர் மணிரத்னம், ரேவதி நரேந்திர மோதிக்கு கடிதம்
இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப் மற்றும் அடூர் கோபால கிருஷ்ணன், நடிகை கொங்கனா சென் ஷர்மா, வரலாற்றாசிரியர் ராம சந்திர குஹா, நடிகை ரேவதி உள்ளிட்ட பலர் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
இதில் இந்தியாவில் நடைபெற்று வரும் கும்பல் கொலைகள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.
"நமது நாட்டில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பல மோசமான சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம்.
நமது அரசமைப்பு, இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோஷியலிச ஜனநாயக குடியரசு; இங்கு மதம், இனம், பாலினம், சாதி இது எல்லாவற்றையும் கடந்து அனைத்து குடிமக்களும் சமம் என்கிறது. எனவே அரசமைப்புபடி குடிமக்கள் அனைவரும் அவர்களுக்கான உரிமையை பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் இதனை எழுதுகிறோம்.
முஸ்லிம், தலித் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் கூட்டாக தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
நீங்கள் நாடாளுமன்றத்தில் இம்மாதிரியான கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்தீர்கள் ஆனால் அது மட்டும் போதாது. இதை செய்தவர்கள் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தகவல்படி 2016ஆம் ஆண்டில் தலித்துகளுக்கு எதிராக 840 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் அது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மிகவும் குறைவே. அக்டோபர் 2018 ல் இருந்து ஜனவரி 1, 2019 வரை மத ரீதியிலாக 254 வெறுப்பு கொலைகள் நடைபெற்றுள்ளன. அதில் 91 பேர் கொல்லப்பட்டனர்; 579 காயமடைந்துள்ளனர்." என தேசிய குற்றவியல் ஆவணத்தின் தகவலைச் சுட்டிக்காட்டியும் அதில் எழுதியுள்ளனர்
’ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கங்கள் தற்போது சண்டையின் தொடக்கமாகிவிட்டது. அதன் பெயரால் சட்டம் ஒழுங்கு மற்றும் பிற கும்பல் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மதத்தின் பெயரால் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. இது பழங்காலம் அன்று. ராமரின் பெயருக்கு இம்மாதிரியான சம்பவங்களால் வரும் அவப்பெயரை நீங்கள் தடுக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. அரசுக்கு எதிரான கருத்துகளை கூறுவதால் மக்கள் `ஆண்டி நேஷனல்` என்றும் `அர்பன் நக்சல்ஸ்` என்றும் கூறப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
இந்திய அரசமைப்பின் 19ஆவது பிரிவு குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கிறது அதில் எதிர்ப்பு தெரிவிப்பதும் கூட அடங்கும்." என அந்த கடிதம் குறிப்பிடுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்