You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பா.ஜ.க ஆட்சியில் ஃபாசிசத்தின் அறிகுறிகள்" - பிரபலமான திரிணாமூல் எம்.பி-யின் முதல் நாடாளுமன்ற உரை
தனது நாடாளுமன்ற கன்னிப் பேச்சின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மவுவா மெளத்திரா. இந்த ஆண்டின் சிறந்த பேச்சு இதுவென சமூக ஊடகங்களில் அவரது நாடாளுமன்ற பேச்சை கொண்டாடுகிறார்கள்.
ஃபாசிசத்தின் ஆரம்பகால அறிகுறிகள் தெரிவதாகவும், இந்திய அரசமைப்பு சட்டம் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
பா.ஜ.கவின் பெரும் வெற்றியை கொண்டாடிய அவர், ஃபாசிசத்தின் ஏழு அறிகுறிகள் தெரிவதாக கூறினார்.
பா.ஜ.கவின் பெரும் வெற்றி, எதிர்ப்பு குரல்களும் கேட்கப்பட வேண்டும் என்பதை அவசியமாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் உரையின் சுருக்கம்,
- தேசியவாதம் என்ற வலிமைமிக்க மூடநம்பிக்கை நம் நாட்டை பிரிக்கிறது. இந்திய நாட்டில் 50 ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என தங்கள் வீட்டை விட்டு வெளியேற்ப்பட்டு, இந்தியர்கள் என்பதற்காக சான்றிதழ் கேட்கப்படுகின்றனர். ஆனால் மற்றொரு புறம் அமைச்சர்களால் தங்கள் பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்பிக்க முடியவில்லை.
- மனித விழுமியங்களை மதிக்காமல் அதிகாரத்தில் இருக்கும் பலர் குற்றச்செயல்களை அதிகரித்து கொண்டிருக்கின்றனர். பட்டப்பகலில் ஒருவரை அடித்து கொள்வது மிகவும் சாதரணமானது. கடந்த வருடம் பெலு கானிலிருந்து நேற்று ராஜஸ்தானில் பாதிக்கபட்ட அன்சாரி வரை பட்டியல் தொடர்கிறது.
- இன்று சமுதாயத்தில் ஊடகங்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் உள்ள பிரதான 5 ஊடகங்கள் ஒரு மனிதரின் கட்டுபாட்டிலே இயங்கி வருகிறது. முக்கிய நேரங்களில் ஆளும் கட்சிக்காக பிரசாரம் செய்கிறார்கள். எதிர்கட்சியின் எந்தவொரு செயலையும் காண்பிப்பது கிடையாது. இந்த தேர்தல் நாட்டில் நடந்ததை விட தொலைக்காட்சியிலும் வாட்ஸ் ஆப்பிலுமே நடந்தது.
- தேசிய பாதுகாப்பு என்ற வார்த்தையை கொண்டு எங்கும் பதற்றத்தை பரப்பி வருகிறார்கள். முன்பு இருந்ததை விட 106 சதவீதம் ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் மொத்த பெயரும் ஒரு மனிதருக்கு செல்கிறது. ராணுவ வீரர்களுக்கு அந்தப் புகழ் கிடைக்கவில்லை.
- மதமும் அரசாங்கமும் இணைந்து செயல்படுகிறது. என்ஆர்சி மற்றும் குடியுரிமை வாங்குவதில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் மறுக்கப்படுகின்றனர். அமைச்சர்கள் இன்று 812 மில்லியன் ஏக்கர் கொண்ட இந்தியாவை விட 2.77 ஏக்கர் நிலத்தை மிகவும் முக்கியமாக கருதுகின்றனர்.
- அறிவுசார்ந்த விஷயங்கள் மற்றும் கலைகளுக்கு சரியான மதிப்பு இல்லை. அறிவியல் வளர்ச்சி போன்றவை இல்லை. இது இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்லும்.
- தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் அழிக்கப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர். இந்தத் தேர்தலில் 66,000 கோடி செலவு செய்யப்பட்டது. இதில் 50 சதவீதம் அதாவது 27,000 கோடி ஒரு கட்சியினரால் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்