You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“யூதர்கள் குல்லா அணிவதைத் தவிர்க்க வேண்டும்” - ஜெர்மனி ஆணையர் மற்றும் பிற செய்திகள்
குல்லா அணிய வேண்டாம்
பொது இடங்களில் யூதர்கள் தங்களுக்கே உரிய 'கிப்பா' எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என யூத எதிர்ப்பை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட 'ஆண்டி செமிடிசிசம்' ஆணையர் ஃபெலிக்ஸ் க்லைன் கேட்டுக் கொண்டுள்ளார். யூதர்களுக்கு எதிரான குற்றங்கள், சம்பவங்கள் ஜெர்மனியில் அதிகரித்து வருவதை அடுத்து அவர் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார். மீண்டும் ஜெர்மன் மண்ணில் யூதர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே இது காட்டுவதாக இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் கூறி உள்ளார்.
சாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை
பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விரிவாகப் படிக்க:சாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை - என்ன நடந்தது?
சந்திரபாபு நாயுடுவை நம்பாமல் ஜெகன் மோகனை ஆதரித்த ஆந்திர மக்கள்
சந்திரபாபு நாயுடு என்ற ஒரு நபரின் பெயரை சொன்னால் பலரது நினைவுக்கு வருவது 'விஷன் 2020'. ஆனால், தற்போது சந்நிதரபாபு நாயுடுவின் அரசியல் எதிர்காலமானது 2020 வரை இருக்குமா என்பதே சந்தேகம்தான். கடந்த 37 ஆண்டுகால அரசியலை எடுத்துப் பார்த்தால், தெலுகு தேசம் கட்சி இப்படி ஒரு மோசமான தோல்வியை சந்தித்ததில்லை. ஆந்திராவின் மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில், வெறும் 23 தொகுதிகளை மட்டுமே அக்கட்சி வென்றுள்ளது.
விரிவாகப் படிக்க:சந்திரபாபு நாயுடுவை நம்பாமல் ஜெகன் மோகனை ஆதரித்த ஆந்திர மக்கள் - பின்னணியும் காரணமும்
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் இடத்தைப் பிடித்த பாஜக
ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பெரும்பான்மை வெற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததுள்ளது ஒருபுறம் இருக்க, நாடு முழுவதும் இடதுசாரிகளின் வீழ்ச்சி குறித்து பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது பாஜக. இருப்பினும் மேற்கு வங்கத்தில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
'யார் முதலில் மரணிப்பது என காத்திருந்த இரு இளம் பெண்கள்'
சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய இதயத்துக்குச் சொந்தமான பெண்ணின் குடும்பத்தாரிடம் இருந்து வந்த கடிதத்தைப் பிரித்தபோது, 31 வயதாகும் ஆலின் கிராகோஸ்ஸியன் நடுக்கம் கொண்டார். ``எனக்கு இதயம் தானம் அளித்தவரின் குடும்பத்திடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாக மருத்துவமனையில் இருந்து எனக்குத் தொலைபேசி மூலம் கூறினார்கள். அந்தக் கடிதத்தை செவிலியர் ஒருவர் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி இருந்தார். ஆனால், எனக்கு அனுப்ப வேண்டாம் என்று அவர்களுக்கு நான் சொல்லியிருந்தேன். அதைப் படிப்பதற்கு நான் ஆயத்தமாக இல்லை,'' என்று அவர் கூறினார்.
விரிவாகப் படிக்க:'யார் முதலில் மரணிப்பது என காத்திருந்த இரு இளம் பெண்கள்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்