‘தமிழகவேலை தமிழருக்கே ’- இந்தியளவில் வைரலாகும் ஹாஷ்டேக் பிரசாரம்

தமிழகத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் தமிழருக்கே என்ற வாதத்தை முன்வைத்து இன்று காலை முதல் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹாஷ்டேக்கும், #TamilnaduJobsForTamils என்ற ஹாஷ்டேக்கும் சமூக ஊடகமான ட்விட்டரில் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கம், தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கங்கள் சிதைக்கப்பட்டு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்திருப்பதாகவும், அதற்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90 சதவிகிதப் பணியிடங்கள் தமிழகர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இந்த பரப்புரை இயக்கம், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் 300 வட மாநிலத்தவரின் பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த வேலை தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை இந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் இந்த பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம், தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில் தொழில் பழகுநருக்கான 1,765 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில், 1,600 இடங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார்கள். இச்செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்தே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

தற்போது, இதுதொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :