You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுக்கோட்டையில் அடங்க மறுத்த காளைகளை அடக்கிய காளையர்கள்
தமிழ்நாட்டில் அரசின் அனுமதி பெற்று நடைபெறுகின்ற 2019ம் ஆண்டின் முதல் ஜல்லிகட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்து வந்த 453 காளைகளை 100ற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர்.ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக 2019 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு அரசாணை வெளியான நிலையில் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.காலை 8 30 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஆட்சியர் கணேஷ் ஆகியோர் ஜல்லிகட்டு உறுதி மொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பின்னர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார்.
இந்த போட்டியில் 453 காளைகளும் 120க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது.
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்து வர அதனை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
ஒரு சில காளைகள் வீரர்களைப் பிடியில் சிக்கின. ஆனால், பல காளைகள் வீரர்களைப் பிடியில் சிக்காமல் சீறிச் சென்றன.ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள் 5 பேர் பார்வையாளர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமுற்றனர். அதில் 4 பேர் உயர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
.