You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பணக்காரர்களுக்கு எதற்கு 1000 ரூபாய்? - தமிழக அரசை சாடிய நீதிமன்றம்
பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 1000 ரூபாய் பொங்கல் பரிசை எல்லோருக்கும் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே அதனை அளிக்க வேண்டுமெனக் கூறியுள்ளது.
தமிழக அரசு பொங்கல் திருநாளை ஒட்டி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசை அறிவித்தது. அதன்படி, அரிசி, கரும்பு, வெல்லம், முந்திரி அடங்கிய பரிசுப் பொதியுடன், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 1000 ரூபாய் பணமும் வழங்கப்படுமென மாநில அரசு அறிவித்தது. ஜனவரி 7ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இந்தத் தொகையும் பரிசுப் பொதியும் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பிற்காக 258 கோடி ரூபாயும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக 1980 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான டேனியல் ஏசுதாஸ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், இவ்வாறு நேரடியாக பணம் வழங்குவதால் மாநில அரசுக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது. ஆகவே இதனை வழங்கத் தடை விதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
காட்டு வாழ்வு: ஒரு குடும்பத்தின் ஆச்சர்யமூட்டும் வாழ்க்கை
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுபோல பணம் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், என்ன நோக்கத்திற்காக இந்தப் பணம் வழங்கப்படுகிறது, இதன் மூலம் அரசு என்ன சாதிக்க விரும்புகிறது எனக் கேள்வியெழுப்பினர். இது ஒரு அரசியல் கட்சியின் பணமல்ல என்றும் அரசின் பணமென்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதனை வைத்து மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். அப்படியிருக்கும்போது இதனை எப்படி அரசின் கொள்கை என்று சொல்லமுடியுமென கேள்வியெழுப்பினர்.
தமிழகத்தில் எல்லாத் தரப்பினரும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா எனக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு பணம் வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பணக்காரர்களுக்கும் இந்தப் பணத்தை ஏன் அளிக்கிறீர்கள், இதன் நோக்கம் என்ன என்று கேட்டனர்.
இதனால், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பதற்குத் தடை விதிப்பதாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் பணம் வழங்கலாம் என்றும் உடனடியாக இதனை அமல்படுத்த வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டில் 1.98 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகள் அனைத்திற்கும் பொங்கல் பரிசு வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
"அவர்கள் எங்களை கொலை செய்யலாம்; ஆனாலும் பயமில்லை"
பிற செய்திகள்:
- ரஜினி, அஜித்துடன் மோதும் 'சிகை' வெற்றி பெறுமா?
- தொடரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் - அமைச்சர்கள் மோதல்
- "இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல": கி. வீரமணி
- ‘TO LET’ திரைப்படம் : சர்வதேச அரசியல் பிரச்சனையை பேசும் ‘குழந்தையின் சித்திரம்’
- அமெரிக்காவில் நினைவிழந்த நிலையிலுள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்த கொடூரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்