You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டன் பெண் மீது இந்தியாவில் பாலியல் தாக்குதல் - 10 நாட்களில் இரண்டாவது சம்பவம்
- எழுதியவர், அர்விந்த் சாப்ரா
- பதவி, பிபிசி பஞ்சாபி
சண்டிகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் 50 வயதைக் கடந்த பிரிட்டன் நாட்டுப் பெண் ஒருவர், தான் தங்கியிருந்த ஆடம்பர விடுதியில் மசாஜ் செய்யச் சென்ற இடத்தில், இந்திய இளைஞர் ஒருவரால் பாலியல் தாக்குதல் செய்யபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் டிசம்பர் 20 அன்றே நடந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் காவல் புகார் அளித்தபின்னரே டிசம்பர் 28 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவாவுக்கு சுற்றுலா வந்த 48 வயதாகும் பிரிட்டன் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்து அவரிடம் கொள்ளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இன்னும் பத்து நாட்கள் கூட முடியாத நிலையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுமார் 25 வயதாகும் அந்தக் குற்றவாளி தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் காவல் துறை பெண் அதிகாரி ஹர்ஜீத் கௌர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தன் இணையருடன் இந்தியா வந்துள்ள அப்பெண் காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளத்தாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணின் வாக்குமூலத்தை நீதித்துறை நடுவரின் முன்னிலையில் காவல் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
அந்த விடுதியில் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பெற்றுள்ள காவல் அதிகாரிகள் ஊழியர்களின் வாக்குமூலங்களையும் பதிவுசெய்துள்ளனர்.
அந்த நபர் பிரிட்டன் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்யவில்லை எனும்போதும், இந்தப் பாலியல் தாக்குதல் சம்பவம் பாலியல் வல்லுறவைக் குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கௌர் தெரிவித்தார்.
டிசம்பர் 2012இல் டெல்லியில் நிர்பயா பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியத்தைத் தொடர்ந்து பல பாலியல் குற்றங்களையும் பாலியல் வல்லுறவாகக் கருதும் வகையில் இந்திய தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டது.
பாலியல் தாக்குதல் நடந்த ஆடம்பர விடுதியை பிபிசி தொடர்பு கொண்டபோது, ஊடகங்களிடம் பேச அதிகாரம் பெற்றுள்ள அவர்களது பொது மேலாளர் இமித் அரோரா ஞாயிறு என்பதால் விடுமுறையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்