You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோஃபியா:'பாசிச பாஜக ஒழிக' என கோஷம் எழுப்பிய பெண் கைது
சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
திங்கள்கிழமை காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.
விமானம் பயணம் நெடுகசோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.
இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தன்னுடைய கருத்துரிமை என சோஃபியா கூறினார். ஆனால், சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார் என்றும் சோஃபியா அதற்கு மறுத்திவிட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் அதிசயகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதனால், தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார்.
இதற்குப் பிறகு, சோஃபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீது பதிவுசெய்யப்பட்ட 505 என்ற பிரிவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதன் பிறகு மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சோஃபியா, வயிற்று வலி என்று கூறியதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை நாளை (செவ்வாய்க்கிழமை) பிணையில் எடுப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கிடையில் விமான நிலையத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், சோஃபியாவுக்குப் பின்னால் ஏதேனும் அமைப்புகள் இருக்கிறதோ என சந்தேகிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
சோஃபியா கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சோஃபியாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கூறியுள்ளார். "அப்படிச் சொல்பவர்களையெல்லாம் சிறையில் அடைப்பீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கிறேன், பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
22 வயதாகும் சோஃபியா, கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வு மாணவியாக இருந்துவருகிறார். இந்தியாவின் இணைய தளங்கள் சிலவற்றிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன் அந்த பெண் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில் இந்திய அளவில் 'பாசிச பாஜக_ஆட்சி ஒழிக' என்ற ஹாஷ் டேக் டிவிட்டரில் டிரண்டாகி வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்