You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார் கருணாநிதி - LIVE
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்கு அவரது உடல் புதன்கிழமை அதிகாலையில் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்ட அவர் உடல், பொதுமக்கள், மூத்த தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியப்பின் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
19.00: 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது
18.45: கருணாநிதி உடலுக்கு அவரது குடும்பத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
18.43: கருணாநிதி உடலுக்கு பேராசிரியர் க.அன்பழகன் மலர் தூவி இறுதி அஞ்சலி.
18.40: கருணாநிதியின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
18.30: கருணாநிதி உடலுக்கு ஆளுநர் இறுதி மரியாதை
18.28: தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது.நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம். - நயன்தாரா
18.21: கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை
18.15: ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
18.10: மெரினா வந்தது கருணாநிதி உடல்
18.05: இன்னும் சற்று நேரத்தில் அண்ணா சமாதியை நெருங்கவுள்ளது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்.
17.54: இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் தேவகெளடா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மெரினா வருகை
17.41: மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மெரினாவுக்கு வருகை.
17.30: சந்திரபாபு நாயுடு, அமைச்சர் ஜெயகுமார், திருநாவுக்கரசர் ஆகியோர் மெரினா வருகை.
17.20: இறுதி ஊர்வலத்தில், ஸ்டாலின், தயாநிதி மாறன், மு.க.தமிழரசு, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர், இராணுவ வாகனத்தைவிட்டு இறங்கி நடந்து செல்கின்றனர்.
17.10: அண்ணா சமாதி வந்த அமைச்சர் ஜெயகுமார் கார் கண்ணாடி உடைப்பு.
16.59: கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மெரினாவுக்கு ராகுல்காந்தி வருகை.
16.52: தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் பெரியார் சிலையை கடந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
16.43: ராஜாஜி அரங்கம் முதல் மெரினா வரை புறப்பட்ட கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் வழிநெடுகிலும் மக்கள் கூட்டம். 60 ஆண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சிய கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் பொது மக்களும், திமுகவினரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.
16.20: மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் கருணாநிதியின் உடல் மெரினாவை நோக்கி எடுத்து செல்லப்படுகிறது.
15.50: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்பட்டது.
15.30: கருணாநிதியின் உடலை ராஜாஜி அரங்கிலிருந்து மெரினா கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.
15.15: கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
15.00: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு டெல்லி சட்டப்பேரவையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு்ள்ளது.
14.56: கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹாலில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் குவிந்துவருவதால், பெரும் குழப்பமும் நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசலில் இருவர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொண்டர்கள் கலைந்துசெல்லும்படி மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
14.55: கருணாநிதியின் உடலை தாங்கி இறுதி ஊர்வலம் செல்லும் ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கம் வந்து சேர்ந்தது.
14.50: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், வீரப்ப மௌலி ஆகியோர் கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
14.48: கருணாநிதி அடக்கம் செய்யப்படும்போது, ராணுவ மரியாதை அளிப்பதற்கு முப்படை வீரர்கள் சுமார் 46 பேர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா சதுக்கத்திற்கு வந்தடைந்த அவர்கள், ராணுவ மரியாதை அளிக்கும் ஒத்திகையை தொடங்கியுள்ளனர்.
14.45: தெலங்கானா மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் ராஜாஜி அரங்கிற்கு நேரில் வந்து கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
14.40: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
14.30: கருணாநிதியின் இறுதிச் சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
14.25: கேரளா ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் ராஜாஜி அரங்கம் வந்து கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
14.23: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் அவர் கலந்து கொள்ளயிருக்கிறார்.
14.20: உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர் கருணாநிதி என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
13.50: ராஜாஜி அரங்கில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ''கலைஞருக்கு மெரினாவில் இடம் தரமுடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்தது. ஆனால், நாம் நீதிமன்றம் சென்று, போராடி இடத்தை பெற்றோம். கலவரம் ஏற்பட இடம் தராமல் தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். எனவே தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும்'' என வேண்டுகோள் வைத்துள்ளார்.
13.40: கருணாநிதியின் உடலுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.
13.15: கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று (8.8.2018) மாலை நான்கு மணிக்கு துவங்குகிறது என திமுக அறிவித்துள்ளது.
13.00: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்கிறோம். மேல்முறையீடு செய்யப்போவதில்லை என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
12.30: கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும் இடம் சீராக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது.
12.15: முக்கிய பிரமுகர்கள் நுழைவாயில் மூலம் ராஜாஜி ஹாலில் நுழைய முயன்றவர்கள் மீது காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர்.
12.00: திமுக முன்னணி தலைவர்கள் துரை முருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் அண்ணா நினைவிடம் அருகே ஏற்பாடுகளை பார்வையிட வந்தனர்.
11.30: கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே தொடங்கின.
11.27 கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு.
11.15 பிரதமர் மோதி கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராஜாத்தி அம்மாள், கனிமொழி, ஸ்டாலினிடம் தனது இரங்கலை மோதி தெரி்வித்துக்கொண்டார்.
11:10 கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கிற்கு வந்தடைந்தார் பிரதமர் மோதி.
10.49: "உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பின்னும் தலைவர் வெற்றிபெற்றுள்ளார். தளபதிக்கு இது முதல் வெற்றி ," என் திமுக தொண்டர்களிடையே துரைமுருகன் பேச்சு.
10.45: தீர்ப்பு வெளியான செய்தி கேட்டு ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் அருகே இருந்த மு.க.ஸ்டாலின் கண் கலங்கினார்.
10.43: கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. அண்ணா சமாதி வளாகத்தில் இடம் கோரி திமுக நேற்று இரவு வழக்கு தொடுத்திருந்தது.
10.28: நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் தீர்ப்பு எழுதத் தொடங்கினார்கள்.
10.26: தமிழக அரசு மற்றும் திமுக ஆகிய இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தன.
10.21: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோதி சென்னை வருகை.
10.18: மக்களின் உணர்வுகள் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது. கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதித்தால், நினைவிடம் அமைக்கவும் அனுமதி கேட்பார்கள் என அரசு தரப்பில் வாதம்.
10.17: "எங்கள் அத்தனை குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வந்தவர் கருணாநிதி. நான் அவர் மீது நிறைய பாசம் வைத்திருந்தேன். அவரும் என் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது," என் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
10.14: "அரசியல், கலை, இலக்கியம் என இந்திய அளவில் கலைஞர் அளவுக்கு பன்முகத்தன்மை கொண்டவர்கள் யாருமில்லை," என கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.
10.11: இந்த மனு மீது உடனடியாக தீர்ப்பு வழங்கக்கூடாது என தமிழக அரசு தரப்பு நீதிபதிகளிடம் கோரிக்கை. தற்போது தீர்ப்பு வழங்காமல் அடுத்த வாரம் வழங்கலாமா என நீதிபதிகள் கேள்வி.
10.10: அடக்கம் செய்ய நிலம் ஒதுக்கும்படி கோர யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என அரசுத் தரப்பு வாதம்.
10.07: கட்சிக்கு அப்பாற்பட்ட உறவு எங்களுடையது. நாட்டுக்கு ஒரு தலைவரை இழந்தது மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையில் ஒரு குடும்ப உறுப்பினரை இழந்த உணர்வு உள்ளது. அவரின் தமிழைப் பார்த்து மேலே வந்தவர்களில் ஒருவன் நான் என அஞ்சலி செலுத்த வந்த நடிகர் கமல் ஹாசன் பேட்டி.
10.00: அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு அரசாணை இல்லை என்பதால், அதை எதிர்க்க முடியாது என தமிழக அரசு வாதம். நீங்கள் எதை வெளியிட்டீர்களோ அதை எதிர்த்தே வாதம் செய்யப்படுகிறது என அரசு தரப்பிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
9.55: முதல்வர் பதவியில் இருந்தவர்களை மெரினாவில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என விதிகள் எதுவும் இல்லை என நீதிபதிகள் கருத்து.
9.50: அரசு பாகுபாடு காட்டுகிறது என்ற புகாருக்கு முகாந்திரம் இல்லை என தமிழக அரசு தரப்பில் வாதம்.
9.45: முன்னுதாரணங்கள் பற்றி கேட்டறிந்த பின்புதான், மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டாம் என முதலமைச்சர் முடிவெடுத்தார் என்று தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தகவல்.
9.42: காந்தி மண்டபம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்வது மரியாதை இல்லையா என தமிழக அரசு தரப்பில் நீதிமேன்றத்தில் கேள்வி.
9.37: காமராசருக்கு மெரினாவில் இடம் கேட்கப்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்பட்டதற்கு, அவ்வாறு கோரிக்கை எழவில்லை என்றும், அவரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது என்றும் திமுக வழக்கறிஞர்கள் பதில் வாதம்.
9.35: திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான தந்தை பெரியார் மெரினாவில் அடக்கம் செய்யப்படவில்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதம்.
9.34: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் மற்றும் முத்தரசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
9.33: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாசர் உள்ளிட்டோர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
9.25: "கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை திமுக அரசியலாக்குகிறது," என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்.
9.22: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது ஏன் என்பதற்கான தமிழக அரசின் பதிலில் தெளிவில்லை என நீதிபதிகள் கருத்து.
9.18: ''மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன,'' என் நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி.
9.15: ''அண்ணா நினைவிடம் உள்ள இடம் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட பகுதிதான், கடலோரப் பகுதியில் வராது,'' என திமுக வாதம். இதே கருத்தை மெரினாவில் தலைவர்களை நினைவிடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தாம் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்ட வழக்கறிஞர் துரைசாமியும் நேற்று கூறி இருந்தார்.
9.12: மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என திமுக வழக்கறிஞர்கள் வாதம். முன்னதாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் மெரினாவில் அடக்கம் செய்ய மத்திய அரசின் விதிகள் அனுமதிக்காது என கூறப்பட்டிருந்தது.
9.10: முதல்வர் பதவியில் இருக்கும்போது மறைந்தவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என விதிகள் எதுவும் இல்லை என திமுக தரப்பும், முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது என தமிழக அரசும் வாதம்.
9.07: 'கருணாநிதியே எனது வாழ்க்கை மற்றும் ஆன்மா என சி.என்.அண்ணாதுரை கூறியுள்ளார். தமிழக அரசு கிண்டியில் இடம் ஒதுக்குவதாக அறிவித்துள்ள இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கும் கருணாநிதிக்கும் வெவ்வேறு சித்தாந்தங்கள்,' என திமுக தரப்பு வாதம்.
9.05: அண்ணாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே கருணாநிதிக்கும் இடம் வேண்டும் என்பதற்காக 'கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியாக ஒன்றானவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வதுதான் முறையாக இருக்கும்,' என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதத்தை முன்வைக்கிறார்.
8.57: மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என பத்திரிகையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் திமுக வழக்கு தொடர முடியாது என்று அரசு தரப்பு வாதத்துக்கு, பத்திரிகையில் வெளியானாலும் அது தலைமை செயலாளரின் அறிவிப்புதான் என் நீதிபதிகள் கூறினர்.
8.55: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுகவின் பொது செயலாளர் க. அன்பழகன் வருகை.
8.50: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் வருகை. ராஜாஜி அரங்கம் அமைந்த சாலை எங்கும் மக்கள் வெள்ளம்
8.48: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்
8.46: கருணாநிதியின் உடலுக்கு ஆர்.எம். வீரப்பன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் அஞ்சலி
8.40: டிராஃபிக் ராமசாமி தரப்பில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால், மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான அவரது மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
8.36: மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுகிறது.
8.32: கருணாநிதியின் உடலுக்கு நடிகர்கள் டி. ராஜேந்தர், விவேக், பிரசன்னா, வையாபுரி உள்ளிட்டோர் அஞ்சலி.
8.26: கருணாநிதியின் உடலுக்கு முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி அஞ்சலி செலுத்தினார்.
8.21: கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவுக்கு பதில் காந்தி மண்டபம் அருகே இடம் அளித்தது அரசின் கொள்கை முடிவு. இது நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என தனது பதில் மனுவில் தமிழக அரசு தகவல்
8.14: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.
8.12: ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ். மனுக்களை வாபஸ் பெறுவதாக டிராபிக் ராமசாமி உள்ளிட்ட மனுதாரர்கள் கூறியதால் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
8.10: மெரினா கடற்கரையில் கருணாநிதியை அடக்கம் செய்வதற்காக திமுக தொடர்ந்த அவசர வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மெரினாவுக்கு பதில் காந்தி மண்டபம் அருகே இடம் தரப்படும் என்று செவ்வாயன்று தமிழக அரசு தெரிவித்தது.
8.05: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் பிரபு, 'கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கும், தமிழுக்கும் பேரிழப்பு' என இரங்கல்.
8.00: கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு மீது சற்று நேரத்தில் விசாரணை தொடங்குகிறது.
7.50: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித்குமார் வருகை
7.45: கருணாநிதியின் உடலுக்கு மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
7.30: கருணாநிதியின் உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் அஞ்சலி.
7.25: திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி.
7.15: கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காணொளி வெளியீடு
7.10: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கம் வந்த தமிழக முதல்வரிடம் மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி தர திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
6.55: கருணாநிதியின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
6.29: நடிகர் ராதாரவி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
6.17: கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
6.10: கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தினகரன்.
6.00: கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
5.40: கருணாநிதி உடல் அருகே இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 5.35: ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டது கருணாநிதி உடல்.
முன்னதாக, காவேரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில், காலமானார்.
கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்காததால் கோபமடைந்த திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தடுப்புகளை உடைத்தனர். இதனை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் தடியடி மேற்கொண்டனர்.
இதனிடையே, இரவு 9 மணிக்கு கண்ணாடி பேழையில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் எடுத்து செல்லப்பட்டது.
கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
காவேரி மருத்துவமனை முதல் ராஜாஜி அரங்கம் வரை நேற்று நடந்தது என்ன?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :