You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருணாநிதிக்காக காத்திருக்கும் கடலை வியாபாரி
கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை அருகே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி வெளியானதில் இருந்தே கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று திடீரென உடல்நிலையில் சிக்கல் ஏற்பட்டதால் காவிரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட, அங்கு தற்போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் குணமாகி வர வேண்டும் என்று குவிந்திருக்கும் தொண்டர்களில் ஒருவர்தான் கடலை வியாபாரி சாரதி தேனப்பன்.
நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கருணாநிதி முரசொலியில் எழுதி வந்த `உடன்பிறப்பே` கடிதத் தொடரை வாடிக்கையாக படித்து வந்ததன் மூலம் தனது படிப்பறிவை வளர்த்து கொண்டதாக கூறுகிறார்.
தனது தந்தை காலத்திலிருந்து திமுக அலுவலகத்தில் கடலை விற்று வரும் சாரதி, கருணாநிதிக்கு தான் நன்கு பரிட்சயம் என்று கூறுகிறார்.
மேலும் அனைத்து திமுக விழாக்களிலும் தான் தவராமல் கலந்து கொண்டுள்ளதாகவும் தனது வீட்டு வீழாக்களுக்கு திமுகவின் ஆதரவு இருந்துள்ளதாகவும் கூறுகிறார் 55 வயது சாரதி தேனப்பன்.
திமுக போராட்டங்களில் கலந்து கொண்டு இதுவரை நான்கு முறை சிறை சென்றிருப்பதாகவும் கூறுகிறார் சாரதி தேனப்பன்.
கருணாநிதியை தவிர வேறொருவரை திமுகவின் தலைவராக நினைத்து கூட பார்க்க முடியாது என்று கூறும் சாரதி தேனப்பன் திமுகவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு மெளனமாகவே இருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :