You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை
காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
'ரைசிங் காஷ்மீர்' (Rising Kashmir) இதழின் ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் அவரது பாதுகாவலர் ஒருவர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே 2000த்தில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அப்போது முதல் புஹாரிக்கு காவல் துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. காஷ்மீரில் அமைதியை நிலை நாட்டுவதில் புஹாரி நீண்ட நாட்களாக முக்கியப் பங்காற்றி வந்தார்.
பிபிசியிடம் பேசிய ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தித்தொடர்பாளர் வஹீத் பாரா, சுடப்பட்டபின் அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை கொண்டுசெல்லப்படும் வழியில் புஹாரி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
சுஜாத் புஹாரி மற்றும் அவரது பாதுகாவலர் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் இன்னொரு பாதுகாவலர் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை தலைமை இயக்குநர் எஸ்.பி.வைத் தெரிவித்துள்ளார்.
"ஈத் பண்டிகைக்கு முந்தைய நாள் தீவிரவாதம் ஒரு இழிவான நிலையை அடைந்துள்ளது," என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் உமர் அப்துல்லா, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :