நீட் தேர்வு முடிவுகள் : முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி

முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி

பட மூலாதாரம், MANPREET ROMANA/AFP/GETTY IMAGES

மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளது. அதில் அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

தேசிய தகுதி தேர்வான நீட் கடந்த மே மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12வது இடத்தை பிடித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர். அதில் 45, 336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இந்தாண்டிற்கான நீட் தேர்வின் தேர்ச்சி விகிதம் 39.55ஆக உள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து சுமார் 83 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில், 32,368 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 38.83 ஆக இருந்தது.

இத்தேர்வில் பிகாரை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடம் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரோகன் புரோகித்துக்கு கிடைத்துள்ளது. அவர் எடுத்த மதிப்பெண்கள் 690.

அதே போல டெல்லியை சேர்ந்த ஹிமான்ஷூ ஷர்மா 690 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12ஆவது இடத்தை பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் இவர் ஒருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

முதல் 50 இடங்கள் பெரும்பாலானவை வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் 50 இடங்களில் டெல்லியை சேர்ந்த 8 பேரும், குஜராத்தை சேர்ந்த 7 பேரும் இடம்பிடித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: