காஷ்மீர் இளைஞர்களை போராளிகளாக்கும் இறுதிச் சடங்குகள்

பட மூலாதாரம், Reuters
இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட காஷ்மீரில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட போராளிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 1989ல் இருந்து இந்திய ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியைக் கண்ட பிராந்தியத்தில் இறுதிச் சடங்குகள் எப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளது என்பதை விளக்குகிறார் சமீர் யாசிர்.
உயிரிழந்த போராளியின் இறுதிச்சடங்குகள் தொடங்கிய உடன் அங்கிருக்கும் பெண்கள் ரத்தம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் பாடல்களை பாடுகின்றனர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வந்தவர்கள் நன்றாக பார்க்கவேண்டும் என்பதற்காக உடல் ஒரு தற்காலிக மேடை மீது வைக்கப்படுகிறது. உடலைத் தொட்டுப் பயபக்தியுடன் மக்கள் தங்கள் கைகளை உயர்த்துகிறார்கள்.
குழுமியிருக்கும் கூட்டத்தில் நுழைந்து வரும் இளைஞர்கள் இறந்த போராளியின் முகத்தில் முத்தமிடுகிறார்கள். ஒரு மத சடங்கின் படி , அவர்கள் போராளியின் கால்களைத் தொட்டு, தங்கள் கைகளால் தங்கள் உடலில் தேய்த்துக்கொள்வார்கள்.
ஒவ்வொரு நிமிடமும் கூட்டத்தினரின் அளவு அதிகரித்துக்கொண்டு செல்கிறது. எதிர்ப்பு கோஷங்கள் விண்ணை துளைக்கிறது. இளைஞர் குழு ஒன்று மைக்ரோஃபோனை கைப்பற்றி, துயரங்களைப் பாடுவதன் மூலம் அவர்களது "போராட்டம்" தொடர துக்கங்கொண்டவர்களை ஊக்கப்படுத்துகிறது. இந்த "கொண்டாட்டங்கள்" உடல் "புனித கல்லறைகளில்" புதைக்கப்படும் வரை தொடரும்.
"எனது மகனுக்கு பிரியாவிடை அளிப்பதற்காக நான் வந்துள்ளேன்" என்று கல்லூரியை இடையில் நிறுத்திவிட்டு கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிவினைவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீனில் இணைந்து தற்போது உயிரிழந்துள்ள 19 வயதான உபைத் ஷாபி மல்லாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த ஜுனா பேகம் மெல்லிய குரலில் கூறுகிறார்.

பட மூலாதாரம், EPA
மல்லாவை பெற்றெடுத்த தாய் இல்லாத போதிலும், அவர் ஒரு குழந்தையாக இருந்தபோது தான் அவருக்கு தாய்ப்பால் கொடுத்ததாக கூறினார். தெற்கு காஷ்மீரின் ஷோபியான் பகுதியிலுள்ள ட்ரெண்ட்ஸ் என்னும் கிராமத்தில் நடக்கும் உபைதின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பாரம்பரிய காஷ்மீர் உடையன வெல்வட் பேரானை அணிந்த ஜுனா பேகம் தனது வாடிய பிளாஸ்டிக் காலணிகளை அணிந்துகொண்டு சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்துள்ளார்.
போராளிகளின் ஆதரவாளர்களை இறுதிச் சடங்கில் பங்கேற்க செய்யவிடாமல் இருப்பதற்காக தெருக்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பாதுகாப்பு படையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக இவர் ஆப்பிள் பழத்தோட்டங்கள் வழியாக வந்தார்.
ஜூனாவை தங்களது தோள்களில் சுமந்துகொண்ட கூட்டத்தினர் அவரை துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த உபைதின் உடலருகே கொண்டுசென்றனர்.
துப்பாக்கிச் சூட்டால் சிதைந்த நிலையிலுள்ள உபைதின் உடலருகே சென்ற ஜுனா அவரது முகத்தில் முத்தமிட்டதுடன், திருமணம் ஆனவுடன் வீட்டிற்கு வரும் தம்பதியினர் மீது மிட்டாய்களை போடும் காஷ்மீரின் பாரம்பரியம்படி அவரது உடலின் மீது மிட்டாய்களை வீசினார். அதன் பிறகு அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடையே பேசத் தொடங்கினார்.
"நீங்கள் ஒரு போலீஸ் அதிகாரி ஆக விரும்புகிறீர்களா?" என்று அவர் கேள்வி கேட்டவுடன், கோபமுடன் இருந்த கூட்டத்தினர் "இல்லை, நாங்கள் விரும்பவில்லை!" என்று பதிலளித்தனர்.
"நீங்கள் ஒரு போராளியாக விரும்புகிறீர்களா?" என்று அவர் தொடர்ந்தார்.
"ஆமாம், நாங்கள் போராளியாக விரும்புகிறோம்" என்று கூட்டத்தினர் கர்ஜித்தனர்.
தற்போது இறுதிச் சடங்குகள் நடக்கும் கிராமத்துக்கு அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த பிரபல போராளியும், கடந்த வாரம் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருமான சமீர் டைகர் என்று அழைக்கப்பட்ட சமீர் பட்டை குறிக்கும் வகையில், "நீங்கள் டைகர் ஆவதற்கு விரும்புகிறீர்களா?" என்று அவர் கேட்டதிற்கு, "ஆம்!" என்று கூட்டத்தினர் பதிலளித்தனர்.
"அதை சத்தமாக தெரிவியுங்கள்" என்று அவர் உரைக்க கூறியவுடன், "அஜாதி (சுதந்திரம்)" என்று கூட்டம் பதிலளித்தது.
பிறகு அந்த தற்காலிக மேடையிலிருந்து கீழிறங்கிய அந்த பெண் கூட்டத்திற்கு சென்று மறைந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தெற்கு காஷ்மீரிலுள்ள ஐந்து மாவட்டங்களில் நிகழ்ந்த இருபதுக்கும் மேற்பட்ட இறுதிச் சடங்குகளுக்கு சென்று செய்தி சேகரித்ததில் இதுவும் ஒன்று.
துப்பாக்கி நிழலில் கொண்டு வரப்பட்ட காஷ்மீர் மக்களின் இளைய தலைமுறையானது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக காணப்படாத எண்ணிக்கையில் போர்க்குணம் கொண்ட எழுச்சியில் இணைகின்றனர். இந்திய ஆட்சிக்கு எதிராக போராடும் தங்களது முன்மாதிரிகளான போராளிகளை காப்பதற்கு இளைஞர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து தோட்டாக்களின் முன்பு நிற்கின்றனர்.

பட மூலாதாரம், EPA
இந்திய ராணுவ வாகனங்களின் முன்பு நிற்கும் இளைஞர்கள் அதன் மீது கல்லெறிகின்றனர். போராளிகள் பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்படும்போது அவர்கள் சாலைகளையும், பாதைகளையும் மூடுவதுடன் ராணுவ வீரர்களின் மீது கல்லெறிகின்றனர். இதுபோன்ற செயற்பாடுகளில் பலர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள காஷ்மீரில் கடந்த 2016ஆம் ஆண்டு வருடம் ஜூலை மாதம் அரசாங்க படைகளுக்கெதிரான மோதலில் போராளிகளின் தலைவரான புர்ஹான் வாணி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது.
மேலும், அவரது நெருக்கிய நண்பரும் போராளியுமான சதாம் பதேர் சமீபத்தில் உயிரிழந்ததை அடுத்து நடந்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். புர்ஹான் வாணியின் இறுதிச் சடங்கை அடுத்து இவரது இறுதிச் சடங்கில்தான் அதிக மக்கள் பங்கேற்றனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் பிரிவினைவாதிகள் இயக்கத்தில் சேர்ந்து 40 மணிநேரமே ஆன காஷ்மீர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சமூகவியலாளரும் அடக்கம்.
'துப்பாக்கி வணக்கம்'
இந்த முடிவில்லாத இறுதிச் சடங்குகள் பங்கேற்கும் இளைஞர்கள் போராளிகளோடு இணைந்து கொள்ள ஊக்கம் பெறுகின்றனர். அவர்களில் பெரும்பான்மையானோர் 1989ல் கிளர்ச்சி தொடங்கிய பின்னர் பிறந்தவர்களாவர்.

பட மூலாதாரம், Hilal Shah
பதேரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வருபவர்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டதாக கூறப்படும் ஆறு காவல் சாவடிகளை கடந்து 17 வயதான ஜுபைர் அகமது நிகழ்விடத்திற்கு வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் உயிரிழந்த போராளிகளின் இறுதிச் சடங்கில் ஜுபைர் கலந்துகொள்வது இது 16வது முறையாகும்.
பதேரின் இறுதிச் சடங்கிற்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் "துப்பாக்கி வணக்கம்" செலுத்துவதற்கு நின்றிருந்த போராளிகளின் குழுவுடன் சேர்ந்து அகமது அந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.
அப்போது அங்கிருந்த போராளிகளில் ஒருவரின் நெற்றியில் முத்தமிட்ட பதேரின் தாயார், அவர் தனது "மற்றொரு மகன்" என்று அங்கிருந்தவர்கள் மத்தியில் கூறினார்.
"ஒருநாள் அவர்கள் காஷ்மீரை இந்தியாவிலிருந்து வெளியே கொண்டுவருவர்" என்று அவர் முழங்கினார். பிறகு அங்கிருந்த கூட்டத்தினர் இந்தியாவிற்கெதிரான முழக்கங்களை எழுப்பினர்.
துப்பாக்கி வணக்கத்திற்கு பிறகு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். போராளிகளுக்கு அருகே செல்லமுடியவில்லை என்பதால் அகமது கதறி அழுதார்.
போராளி ஒருவரின் இறுதிச் சடங்கில் அகமது பங்கேற்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் வெளியானதை தொடர்ந்து அவர் சென்ற வருடம் கைது செய்யப்பட்டார். தனது மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் தனது "தொழில்ரீதியான வழக்கை முடிந்துவிட்டது" என்றும், தன்னால் அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
"ஒருநாள் நான் ஏ.கே.47 துப்பாக்கியை வைத்துக்கொண்டு இதேபோன்று வானத்தை நோக்கி சுடுவதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்று அச்சுறுத்தும் வகையில் அகமது கூறினார்.
"அப்போது நீங்கள் எனது வார்த்தைகளை நினைவுகூறுவீர்கள்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












