You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதார் போன்ற ஒற்றை அடையாளத்தை வளர்ந்த நாடுகள் தவிர்ப்பது ஏன்?
- எழுதியவர், மிஷி சௌதரி
- பதவி, பிபிசி
ஒற்றை எண்ணை வைத்து ஒரு தனிப்பட்ட நபரின் அடையாளங்கள் மற்றும் சுயவிவரங்கள் ஆகியவற்றை அறிய முடியும், உலகின் மிகப்பெரிய திட்டமாக தற்போது ஆதார் திட்டமே உள்ளது.
இந்த எண்ணை பயன்படுத்தி அரசு வழங்கும் சேவை மற்றும் தனியார் நிறுவனங்களின் சந்தைப் பரிமாற்றங்கள் ஆகியவற்றை எளிதில் அறிய முடிகிறது. வெறும் கை ரேகை அல்லது முகத்தின் அடையாளம் ஆகியவற்றைக் கொண்டே ஒரு குறிப்பிட்ட நபர் அந்த ஆதார் எண்ணுக்குச் சொந்தக்காரரா என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.
இந்த எண்ணின் பெயரைப் போலவே, இது அரசு மற்றும் தனியார் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் தகவல்களின் தொகுப்புக்கான அடிப்படை 'ஆதாரமாக' உள்ளது.
இந்தத் திட்டம் மிகவும் சிறப்பானதாக இருந்தால், ஏன் பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகிறது? தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகள்கூட ஏன் ஆதார் எண் போன்றதொரு திட்டத்தை தங்கள் நாட்டில் ஏன் அமல்படுத்தவில்லை?
மிகவும் வளர்ச்சியடைந்த வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தனிமனித அந்தரங்க உரிமைக்கு ஆதரவானவர்கள் ஆகியோர் ஒரு நபருக்கு ஒரு அடையாள எண்ணை வழங்கி அவர் அரசிடம் பெறும் சேவைகள், பணப் பரிமாற்றங்கள் ஆகியவற்றை அத்துடன் இணைப்பது நல்ல திட்டமல்ல என்கின்றனர்.
இதேபோன்றதொரு திட்டத்தை செயல்படுத்த விரும்பிய பிரிட்டன் அரசு, 2010இல் அம்முடிவைக் கைவிட்டது . இஸ்ரேல் ஒற்றை அடையாள எண் வழங்கினாலும் அந்த எண்ணுடன் கைரேகை இணைக்கப்படவில்லை. தரவுகளும் ஒரே இடத்தில் சேமிக்கப்படுவதில்லை.
அமெரிக்காவில் நாடு முழுமைக்கும் ஒற்றை அடையாள எண்ணை பயன்படுத்தும் ஆதார் போன்ற நடைமுறை இல்லை.
இந்த நாடுகள் தங்கள் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களின் கைரேகை, கருவிழி உள்ளிட்ட தரவுகளை மட்டுமே பெறுகின்றன. தங்கள் சொந்த மக்களிடம் அவற்றைப் பெறுவதில்லை.
வங்கிக் கணக்குகளுடன் கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை இணைக்கும் நடைமுறை சீனா, வெனிசுவேலா, இராக், பிலிப்பைன்ஸ் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளது.
பாதுகாப்பு குறைபாடு
ஒட்டுமொத்த மக்கள்தொகையின் உடலியல் அடையாளங்களின் தரவுகள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவரங்கள் ஆகியன அரசால் ஒரே இடத்தில் மையமாக வைத்திருப்பது அந்த சமூகத்திற்கே பாதுகாப்பானதல்ல.
அரசுகளால் வெள்ளம், நோய்பரவல் போன்ற பேரிடர் வந்தால் அவற்றை மேலாண்மை செய்ய மட்டுமே முடியும். அவற்றைத் தடுக்க முடியாது. இந்தியாவில் ஆதார் எண்களை பராமரிக்கும் யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) நிறுவனம் இணையம் மூலம் ஆதார் தகவல் திருட்டு மற்றும் கசிவுகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையாளவில்லை.
தனிமனித தகவல்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டு ஆதார் மூலம் சந்தைப்படுத்துவதை அதிகரிக்கும் நடவடிக்கைகளே இங்கு அதிகமாக உள்ளன.
உளவு பார்க்கஆதார் எண்
ஆதார் எண் மூலம் ஒருநபர் செல்லும் இடங்கள், வாங்கும் பொருட்கள், செலவிடும் தொகை, வங்கிக் கணக்கில் இருப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும். அந்தத் தகவல்களைத் தெரிந்துகொண்டு தனிநபர்களை அச்சுறுத்த முடியும்.
தங்களை பற்றிய விவரங்களை அரசிடம் தருபவர் தன் வாழ்நாள் முழுதும் சிக்கலை எதிர்
கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. தங்கள் நாட்டு அரசு சர்வாதிகார அரசாக ஒருபோதும் மாறாது என்று அவர்கள் நம்பவேண்டியுள்ளது.
அரசு ஜனநாயகத்துக்கு எதிரானதாகத் திரும்பினால், தனிநபர்களை இந்த தரவுகள் மற்றும் அடையாளங்கள் மூலம் எளிதில் இலக்கு வைக்க முடியும்.
புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கு எதிரான செயல்பாட்டாளர்கள் சீனாவில் ஏற்கனவே அத்தகைய கண்காணிப்புக்கு ஆளாகியுள்ளனர். சீனாவின் ஷிங்ஜியாங் மாகாணத்தில் 12-65 வயதானவர்களுக்கு டிஎன்ஏ, கைரேகை, கருவிழிப் படலத்தின் படம், ரத்த மாதிரி ஆகியவற்றை சேகரித்துள்ள ஏற்கனவே மிகப்பெரிய தகவல் களஞ்சியம் உள்ளது.
முகங்களை வைத்து மனிதர்களை அடையாளம் காணும் மென்பொருள்கள், கண்காணிப்பு கேமராக்கள், பயோமெட்ரிக் தரவுகள் ஆகியவை அந்த நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியின் மாதிரிகளாக காட்டப்படுகின்றன.
தனியார் நிறுவனங்களும் ஆதார் எண்களைக்கொண்டு சேவைகளை வழங்கும் இந்தியாவிலும் உளவு பார்க்கும் நோக்கில் இத்தகைய கண்காணிப்புகள் நடக்கலாம் என்று கருதப்படுகிறது.
தரவுகள் கசிந்தால் சமாளிப்பது கடினம்
இவ்வாறு ஒரே இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தரவுகளும் இணையம் மூலம் ஒருவேளை கசிந்தால் அதனால் உண்டாகும் பேரிடரை கையாள்வதும் மிகவும் கடினமானதாகிவிடும்.
ஆதார் போன்ற அடையாள எண்களைப் பயன்படுத்தி வணிகப் பரிவர்த்தனைகள் நடைபெற்றால், வாங்குபவரின் தரவுகளை வருங்காலப் பரிமாற்றங்களுக்காக விற்பனை செய்பவர் சேமித்து வைக்கக் கூடும்.
கைரேகைகளை அங்கீகரித்து அதன்மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பயன்படும் கருவிகள், அந்தக் கைரேகைகளின் படங்களை சேமித்து வைக்கும் வகையில் செலவின்றி மாற்றம் செய்யப்படலாம்.
ஆதார் எண்கள் உடைய தனிநபர்களின் கைரேகைகளை அடையாளம் காண கருவிகளால் முடியாமல் போனதால் அரசின் சேவைகளை அவர்களால் பெற முடியாமல் போன சம்பவங்களும் உண்டு.
பல தொழில் அதிபர்கள், இந்த ஒற்றை அடையாள எண் மூலம் அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டால் ஊழல் ஒழிக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால், பிறருக்கோ இது, மானியவிலை உணவுப்பொருள் வழங்கல் மறுப்பு உள்ளிட்ட அன்றாட வாழ்வாதாரத்துக்கான பிரச்சனை.
ஆதார் எண் காட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அரசு உதவிகள் மற்றும் சேவைகளை பெற ஆதார் எண் வேண்டுமென கட்டாயப்படுத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள போதிலும் பல சமூக நல உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்கிறது அரசு.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயரிய நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு இந்த நாடு காத்திருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்