"என் மகன் திருடனல்ல" கலங்கும் மதுவின் தாய்

பட மூலாதாரம், Sonu AV
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி
கேரளாவின் காட்டு பகுதியில் மூன்று வாரங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த மது, தான் குகையில் வாழ்வது குறித்து கவலைப்படவேண்டாம் என எப்போதும் தன் தாயிடம் கூறுவார்.
வீட்டில் தன் மகள்களுடன் அமர்ந்து உணவு உண்ணும் போது மதுவை பிரிந்திருக்கும் துயரத்தை அவரது தாய் கூறியபோது, மது தன் தாயிடம் "என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் விலங்குகளுடன் பாதுகாப்பாக வாழ்கிறேன். விலங்குகள் என்னை தாக்காது" என்றிருக்கிறார்.
ஆனால் சில மனிதர்களாலேயே அடித்து கொல்லப்படுவார் என மது நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். உணவை திருடியதாக நினைத்த சிலர் அவரை தாக்கியதில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியன்று மது கொல்லப்பட்டார். சிலர் அவர் தாக்கப்படும் போது நின்று செல்ஃபியும் எடுத்தனர்.

பட மூலாதாரம், Sonu AV
56 வயதான மதுவின் தாயார் மல்லி, அவருடன் பேசியதை நினைத்து தேம்புகிறார்.
சைலன்ட் வேலீ தேசிய பூங்கா அருகில் உள்ள தங்கள் சிறிய வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள காட்டின் குகையில் மது தங்கியிருந்ததில் மல்லிக்கு விரும்பமில்லை
"அவன் காட்டில் பாதுகாப்பாக இருக்கிறான் என்று கூறியதை நான் நம்பினேன். அவனை திருடன் என்று கூறி, அதற்காக அவன் கொல்லப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது" என்று பிபிசியிடம் கூறினார் மல்லி.

பட மூலாதாரம், Sonu AV
அவர் முகத்தில் வழியும் கண்ணீரை துண்டால் துடைத்து கொண்டு பேசிய மல்லி "அவன் திருடனல்ல. அது மாதிரி திருடுபவனும் அல்ல. மற்றவர்களின் அனுமதியில்லாமல் அவர்கள் உணவை உண்ணுவது, எங்கள் கலாசாரத்தில் இல்லை. அவனுக்கு உணவு வேண்டும் என்றால், அதனை கேட்டு உண்ணுவான். அதுதான் அவன் இயல்பு" என்கிறார் அவர்.
ஒரு சிறிய பையில் உணவு பொட்டலங்களை மது எடுத்துக் கொண்டு சென்ற போது, சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டார். மதுவின் கைப்பையில் உணவு இருந்ததை பார்த்த அந்தக் கும்பல், அதனை எங்கிருந்து திருடினாய் என்று கேட்டு மதுவை தாக்க தொடங்க, சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மதுவை மீட்ட காவல்துறையினர் அவரை தங்கள் ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மது உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Sonu AV
மல்லியின் வீட்டிற்கு பயணிப்பது, காட்டில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த மாதிரியான வளர்ச்சி நிலை உள்ளது என்பதை பிரதிபலிக்கிறது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னர்காடிலிருந்து முக்கலி என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு, ஜீப் சேவை பயன்படுத்திதான் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றடைய முடியும்.
பழங்குடியின மக்களுக்கான மருத்துவமனைக்கு செல்ல பள்ள மேடான நிலப்பரப்பில், நான்கிலிருந்து ஆறு கிலோ மீட்டர் வரை ஜீப்பில் பயணம் செய்ய வேண்டும். சாலை என்ற ஒன்று இங்கு கிடையாது. மருத்துவமனை வளைவுக்கு 100 மீட்டருக்கு முன், காட்டுக்குள் செல்வதற்கான ஒரு வழி இருக்கும், அங்கு சென்று மதுவின் வீட்டை கேட்டால் யார் வேண்டுமானாலும் வழி சொல்வார்கள்.
சின்னடக்கிபழையூரில் உள்ளது மதுவின் தந்தை வழியில் உள்ள தாத்தாவின் வீடு. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், திருமணமான மல்லி இங்குதான் வந்தார். திடீரென அவரது கணவர் மறைந்த பின், குழந்தைகளை வளர்க்க தன் தாய் வீட்டிற்கு சென்றார் மல்லி. அவரது மகள்கள் சரசு (29) மற்றும் சந்திரிக்கா(28), அருகில் உள்ள வயனாடு மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க சென்றனர்.

பட மூலாதாரம், Sonu AV
வீட்டின் மூத்த மகனான மது, கொக்கம்பாளையம் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்தார். பிறகு, காட்டிற்கு சென்று தேன் மற்றும் சில மூலிகைகள் சேகரித்து அதனை சின்னடக்கியில் உள்ள குரும்பர் பழங்குடியின மக்கள் சேவை கூட்டுறவு சங்கத்திற்கு விற்று வந்தார்.
அப்போது மதுவின் தாயார் மல்லி, அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து 196 ரூபாய் சம்பாதித்து வந்தார். தனது மகள்கள் வளர்ந்த பிறகு, சின்னடக்கிபழையூரில் உள்ள தனது கணவர் வீட்டிற்கே மீண்டும் சென்றார்.
மதுவிற்கு சுமார் 16 வயது இருக்கும் போது, சற்று வித்தியாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். ஒன்று அமைதியாக இருப்பார், அல்லது வன்முறை செய்வார். இதனால் அவரை கோழிக்கோட்டில் உள்ள மனநல நிலையத்துக்கு அழைத்து சென்றனர். "அங்கு அவனுக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டது. சில நாட்கள் அதை எடுத்துக் கொண்ட மது, பின்பு மாத்திரைகள் எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான்" என்கிறார் மல்லி.

பட மூலாதாரம், Sonu AV
மேலும், "சில நாட்கள் கழித்து, காட்டில் உள்ள குகைக்கு சென்று அங்கேயே வாழத் தொடங்கினான் மது. ஒருமுறை அவன் காணாமல் போக, போலீசில் புகார் அளித்தோம். அந்த குகையில் அவன் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர், ஆனால் வீட்டிற்கு வர அவன் மறுத்து விட்டான்" என்றார் அவர்.
ஆனால், "அவர்களுக்கு நாளுக்கு இரண்டு முறை உணவை என்னால் வழங்க முடிந்தது". மது குகையில் இருந்தாலும் கூட, அவன் போதிய உணவு எடுத்துக் கொள்வதை மல்லி உறுதி செய்தார். அவர் வருமானம் 6000 ரூபாய் வரை உயர, அவர் மருமகன்களும் வீட்டிற்கு உதவி செய்தனர்.
மதுவை கொன்றது பசியா? அல்லது ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட நபரின் மீதுள்ள இந்த சமுதாயத்தின் அக்கறையின்மையா? அவரின் தாய் கூறுவதை வைத்து பார்க்கும்போது, இதற்கு காரணம் சமுதாயத்தின் அக்கறையின்மைதான் என தெரிகிறது.

பட மூலாதாரம், Sonu AV
"அவர் தனியாக வாழ்ந்து வந்தார், அதனால்தான் பசி கொண்ட நிலையில் இருந்திருக்கிறார். மற்றபடி மது யாருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவர் அல்ல" என்கிறார் மாவட்ட மருத்துவ அதிகாரியான பிரபு தாஸ்.
"பழங்குடியினர் கலாசாரத்தில் உணவு குறித்த உணர்வு என்பது மாறுபட்டது. அவர்களை பொருத்தவரை உணவு என்பது ஒருவருக்கானதல்ல. அந்த மக்கள் உங்களுக்கு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் உணவு வழங்குவார்கள். அதனால்தான், உணவை எடுத்தது திருட்டு என மது நினைத்திருக்க மாட்டார்" என தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின், திட்ட இயக்குனர் சீமா பாஸ்கர் கூறுகிறார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
ஆனால், பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு ஆர்வலர் வேறொரு கேள்வியை எழுப்புகிறார்.
இச்சம்பவம் வெறும் பசி பற்றியது அல்ல என்று தெளிவாக தெரிகிறது. மனநோயாக இருக்கலாம். ஒருவேளை, அவர் ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கைக்கு சாட்சியாக இருந்ததினால் அடித்துக் கொல்லப்பட்டாரா? ஏனெனில் மது தங்கியிருந்த குகை, சுதந்திரமாக சென்று வரக்கூடிய இடமல்ல. அப்பகுதிக்குள் செல்ல வனத்துறை அதிகாரிகளே அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், எப்படி அவ்வளவு நபர்கள் அந்த இடத்திற்கு சென்று மதுவை கொன்றனர்" என்ற கேள்வி எழுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












