குரங்கணி காட்டுத் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

குரங்கணி

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 4 பேர் பெண்கள், 4 பேர்ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்கும்.

இறந்தவர்களில் மூன்று பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள்.

தேனி, குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சிக்கி உள்ளவர்கள் மீட்க தரைவழியாக 16 கமாண்டோ வீரர்கள் சென்றுள்ளனர்.

முன்னதாக, தேனி காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக கோவை சூலூரில் இருந்து கமாண்டோக்களை அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.

மீட்புப்பணி தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், மலையில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஏற்கனவே இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.

தீ விபத்து

குரங்கணி காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட 36 நபர்களும் மீட்கப்படுவார்கள் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேற்று உறுதி அளித்து இருந்தார்.

மலைஏறும்(trekking) பயிற்சிக்காக காட்டுக்குள் வந்தவர்கள் காட்டுத்தீயில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரங்கணி - Kurangani Forest fire

''இரவு நேரம் என்பதாலும், மலை சரிவு பகுதியாக இருப்பதாலும், மீட்கப்படுவதில் சிரமம் உள்ளது. ஆனால் மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று முதல் உதவி அளித்துவருகின்றனர். மூன்று குழந்தைகள், எட்டு ஆண்கள், 25 பெண்களும் இரண்டு நாட்கள் மலைஏறுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திரும்பும்போதுதான் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இந்த தீ இயற்கையாக ஏற்பட்டது அல்ல'' என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் பாதிக்கப்படுள்ளவர்களை நேரில் வந்து சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

குரங்கணி - Kurangani Forest fire

பட மூலாதாரம், Twitter

குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இருந்து தப்பித்துவந்துள்ள சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி,'' சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த நாங்கள் மலை ஏற்றம் சென்றோம். ஒரு சிலர் மாட்டிக்கொண்டனர். எனக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. நாங்கள் பாறைக்குள் குதித்து தப்பித்துவிட்டோம். தப்பிக்கமுடியாத காரணத்தால் சிலர் மாட்டிக்கொண்டனர்,'' என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

குரங்கணி காட்டுத் தீ: Kurangani Forest fire

மீட்புப் பணியில் போடி பகுதியில் உள்ள பொதுமக்களும் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குரங்கணி காட்டுத் தீ: மீட்பு பணியில் 4 ஹெலிகாப்டர்கள்

பிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 12 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ''மலைப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வண்டியை செலுத்த முடியாதால், மருத்துவக்குழுவினர் நடந்துசென்று பாதிக்கப்பட்டவர்களை கொண்டுவந்தனர். தற்போது எட்டு நபர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குரங்கணி மலை மீது மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளனர். இரவு நேரம் என்பதால், அங்குள்ளவர்களுக்கு உடனடி முதல்உதவி கொடுக்கப்பட்டு, பின்னர் கீழே கொண்டுவரப்படுகின்றனர்,'' என தெரிவித்தார்.

Kurangani Forest fire

25 பேர் மீட்பு

காட்டுத்தீ

இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை விரைந்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

ராதாகிருஷ்ணன்

மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவ வசதிகளும் தயாரக உள்ளன. திருச்சியிலிருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். போதுமான மருந்துகள் உள்ளன என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர், "ஆறு மருத்துவ குழுக்கள் நேரடியாக சிகிச்சை அளிக்க மலை பகுதிகளுக்கு சென்றுள்ளனர்" என்றார்.

அரசு இராசாசி மருத்துவமனை

மூன்று பேர் 90 சதவீத காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார். மேலும் அவர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.முதல் கட்டமாக மீட்கப்பட்ட 8 பேர் நலமாக உள்ளனர் என்கிறார்.

8 பேர் பலி

தேனி குரங்கணி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்டரில் தெரிவித்து இருந்தார்.

பின் இந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

பொன். ராதாகிருஷ்ண

மீட்கப்பட்டவர்களில் பலர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளதாக கூறும் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன." என்கிறார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்திலேயே தீக் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேக தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

மீட்புப்பணியில் கிராமமக்கள்

மீட்புப்பணியில் கிராமமக்கள் இறங்கி உள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட மக்கள் தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :