You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அய்யாக்கண்ணுவை தாக்கியவருக்கு 'வீர தமிழச்சி விருது': ஹெச். ராஜா
திருச்செந்தூரில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்த விவசாயி அய்யாகண்ணுவை கன்னத்தில் அறைந்து செருப்பை தூக்கி காட்டிய பாஜகவின் மாவட்ட மகளிரணி செயலாளர் நெல்லையம்மாளுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (வியாழக்கிழமை) திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அய்யாக்கண்ணு மற்றும் அவரது குழுவை சேர்ந்த பிற விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தடைவிதிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
அப்போது, திடீரென கூட்டத்திற்குள் புகுந்த பாஜகவை சேர்ந்த மாவட்ட மகளிரணி செயலாளர் நெல்லையம்மாள், பொதுமக்களிடம் அய்யாக்கண்ணு விநியோகித்திருந்த துண்டு பிரசுரங்களை பிடுங்கி எறிந்து அய்யாக்கண்ணுவை மோசடிகாரர் என்று குறிப்பிட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விவசாய சங்க தலைவர், பாஜக பெண் பிரதிநிதி கைகலப்பு (காணொளி)
இதில் கோபமடைந்த அய்யாக்கண்ணு பதிலுக்கு நெல்லையம்மாளை திட்ட வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில், அய்யாக்கண்ணுவை நோக்கி செருப்பை எடுத்து காட்டிய நெல்லையம்மாளிடம் அய்யாக்கண்ணுவுடன் வந்திருந்த பிற விவசாயிகளும் வாக்குவாதம் செய்தனர். அய்யாக்கண்ணு தாக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு இழிந்த வார்த்தைகளை உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது என்றும், அய்யாக்கண்ணுக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாளுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :