“விதை...மரம்”கமல் அரசியல் பிரவேசம் - என்ன சொல்கின்றன பிறகட்சிகள்?

இன்று (புதன்கிழமை) அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்று ஆசி பெற்று தன் அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

மீனவர்களுடன் உரையாடல், ரசிகர்கள் மத்தியில் பேச்சு, பொதுக்கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு என மிக உற்சாகமாக காலை முதல் பயணம் செய்து வருகிறார் கமல்.

இந்நிலையில், கமலுடைய அரசியல் பிரவேசம் குறித்து பிற தலைவர்களும், நட்சத்திரங்களும் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். அவற்றின் தொகுப்பு.

"மரபணுமாற்றப்பட்ட விதை"

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், கமலை மரபணு மாற்றப்பட்ட விதை என்றார். அவரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர் ஒரு காகிதப் பூ என்று கூறினார்.

மேலும் அவர், கமலின் அரசியல் பயணத்தில் எழுச்சி இல்லை. அவரிடமும் முதிர்ச்சியும், தலைமை பண்பும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

"போன்சாய் மரம்"

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை செளந்தராஜன், இத்தனை நாள் போன்சாய் மரமாக இருந்தவர், தீடீரென விருட்சமாக உருவெடுக்கப்பார்க்கிறார். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது என்றார்.

மேலும் அவர், "நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் தலைவராக முடியாது" என்றார்.

"திமுவுக்கு எதிரான காய்நகர்த்தல்"

கமலின் வருகையை திமுகவுக்கு எதிரான காய்நகர்த்தலாக தான் பார்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.

இயல்பாக அடுத்த தேர்தலில் திமுக வெல்வது போன்ற நிலைதான் இருந்தது. ஆனால், திமுக வர கூடாது என்று நினைப்பவர்கள். திமுகவுக்கு பாதிப்பை உண்டாக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் காய் நகர்த்தல்தான் இது என்று அவர் கூறியுள்ளார்.

அதுபோல, கிரிக்கெட் நட்சத்திரம் அஸ்வின் ரவிசந்திரனும் கமல் அரசியல் பிரவேசம் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அரசியல்களம் மாற்றத்திற்காக தயார் செய்து கொள்கிறதா என்ற தொனியில் உள்ளது அந்த ட்வீட்.

சாதனை

முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் சென்று பல சாதனைகள் படைத்தவர் நீங்கள். அந்த சாதனை அரசியலிலும் தொடரட்டும் என்று ட்வீட் பகிர்ந்து இருக்கிறார் நடிகர் கார்த்தி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :