You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்: சென்னை திருநங்கை கடிதம் - நாளிதழ்களில் இன்று
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா - "என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்"
ஏர் இந்தியாவில் பணி கிடைக்காததை அடுத்து திருநங்கை ஷனாவி பொன்னுசாமி, `என்னை கருணை கொலை செய்து விடுங்கள்` என்று இந்திய குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார் என்ற செய்தி டைமஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்துக் கொள்வதற்கு முன், இந்த 26 வயது பொறியாளர் சதர்லாந்த் நிறுவனத்திலும், ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை மையத்திலும் பணியாற்றியதாக அந்த செய்தி விவரிக்கிறது. 2016 ஆம் ஆண்டு, ஏர் இந்தியாவில் கேபின் பணிக்கு நான்கு முறை தான் விண்ணப்பித்ததாகவும், தன்னை நேர்காணல் செய்தவர்கள் தனக்கு நம்பிக்கை ஊட்டியதாகவும், ஆனால், தன் பெயர் இறுதி பட்டியலில் குறிப்பிடப்படவில்லை என்றும், இது குறித்து விசாரித்தபோது ஏர் இந்தியா அந்தப் பணியை பெண்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என அந்த செய்தி கூறுகிறது.
தினத்தந்தி - 'முதல் அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு'
போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்க தி.மு.க சார்பில் தயாரித்த பரிந்துரைகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மு.க. ஸ்டாலின் வழங்கிய செய்தி முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களை நஷ்டமில்லாமல் இயக்குவது பற்றி ஆய்வறிக்கை தயார் செய்வதற்காக திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும், அவர்கள் போக்குவரத்து கழகத்தை லாபத்துடன் இயக்க 27 பரிந்துரைகளை வழங்கியதாகவும், அந்த பரிந்துரைகள் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி இந்து (தமிழ்)
தினமணி - `தீர்வு இல்லாமல் தேர்தல் இல்லை'
`தீர்வு இல்லாமல் தேர்தல் இல்லை` என்ற தலைப்பில் எதிர்வரும் நாகலாந்து தேர்தல் குறித்து தலையங்கம் எழுதி உள்ளது தினமணி. மத்திய அரசுக்கும் நாகா தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படை குறித்தோ, சாரம்சம் குறித்தோ விவரங்களை வெளியிடாமல் தேர்தலை அறிவித்து இருப்பது நாகலாந்தில் மிகப்பெரிய எதிர்ப்பை உருவாக்கி இருப்பதில் ஆச்சர்யம் இல்லை என்று விளக்குகிறது அந்த தலையங்கம்.
தி இந்து (ஆங்கிலம்) - 'ஒ.என்.ஜி.சி கப்பல் வெடி விபத்து: 5 பேர் பலி'
கேரளாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்துக்கு சொந்தமான கப்பலில் நேற்று குழாய் வெடித்ததில் 5 பேர் பலியான செய்தி தி இந்து ஆங்கில நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொச்சி துறைமுகத்தில் ஓஎஞிசி நிறுவனத்துக்குச் சொந்தமான `சாகர் பூஷன்` என்ற துரப்பணக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், கடந்த ஒரு மாதகாலத்துக்கும் மேலாக, அந்தக் கப்பலில் பழுது நீக்கம் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் விவரிக்கிறது அந்த செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்