''மருத்துவம் படிக்கவந்த என்னை டீ விநியோகிக்க வைத்தனர்'': தற்கொலைக்கு முயன்ற தமிழக மாணவர்

- எழுதியவர், ராக்ஸி கக்டெகர் செஹாரா
- பதவி, பிபிசி குஜராத்தி சேவை
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் மாரிராஜ் நோயாளிகளுடன் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
பேராசிரியர்களால் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும், நாற்காலியை விட்டு எழ கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், சக மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தேநீர் அளிக்க கூறப்பட்டதாகவும் கூறுகிறார் அகமதாபாத் பி.ஜே மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாரிராஜ்.
சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் ஒரு பகுதி இது என்கிறார் அவர். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ், 2015-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தது முதல் சாதிய பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகக் கூறுகிறார்.
மருத்துவமனையில் பணிபுரியும் 9 மருத்துவர்களுக்கு எதிராக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சாதி, பிராந்தியவாதம் மற்றும் மொழி தொடர்பான பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டதாக கூறும் மாரிராஜ், தமிழகத்திற்குத் திரும்ப சென்று படிப்பை தொடர விரும்புகிறார்.
தமிழகம் செல்ல விரும்புகிறேன்:
திருநெல்வேலியில் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாரிராஜ், முதுகலைப் படிப்புக்கு தனக்கு இந்தியாவில் எந்த கல்வி நிறுவனத்தில் இருந்தும் அனுமதி கிடைத்திருக்கும் என்றும், ஆனால் குஜராத்தில் படிக்க வேண்டும் என விரும்பியதாகக் கூறுகிறார். ''ஆனால், தற்போது நான் தமிழகம் செல்ல விரும்புகிறேன்'' என பிபிசியிடம் கூறுகிறார் மருத்துவமனை அறையில் தனியாக அமர்ந்திருக்கும் மாரிராஜ்.
ஜனவரி 5-ம் தேதி பேராசிரியர்களும், மாணவர்களும் தன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் கூறுகிறார்.
அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சாதி மற்றும் பிராந்தியம் காரணமாகத் தனது தகுதிக்கு அடிப்படையான பணியை ஒதுக்கவில்லை என கூறுகிறார்.

மாரிராஜ் படிக்கும் துறையின் தலைவர் டாக்டர் பிரசாந்த் மேத்தா, இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கூறுகிறார். ''பல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எங்களுடன் பணியாற்றுகிறார்கள். யாரும் இது போன்ற பிரச்சனையை எதிர்கொண்டதில்லை'' எனவும் அவர் கூறுகிறார்.
அகமதாபாத் அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியாக பி.ஜே மருத்துவக் கல்லூரி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய மருத்துமனை என கூறப்படும் இந்த மருத்துவக் கல்லூரி, குஜராத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று.
ஜனவரி 5-ம் தேதி ஒரு அறுவை சிகிச்சை செய்ய மாரிராஜ் கோரிக்கை வைத்தார் என மேத்தா கூறுகிறார், '' இத்துறையின் தலைவராக என்னால், ஒரு மாணவர் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக 22 அறுவை சிகிச்சைகளில் பங்கேற்ற மருத்துவக் குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார்.'' என்கிறார் மேத்தா.
வாக்குமூலம்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாரிராஜ் அளித்துள்ள புகாரில் டாக்டர் மேத்தா பெயரும் இடம்பெற்றுள்ளது. ''சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்று வருகிறோம். போதிய ஆதாரங்கள் பெற்ற பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்வோம்'' என பிபிசியிடம் கூறுகிறார் எஃப் டிவிஷன் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் காடியா.
தன் மீதான பாகுபாடு குறித்து 2015-ம் ஆண்டே மருத்துவமனை அதிகாரிகளிடம் மாரிராஜ் புகார் அளித்துள்ளார். ''பாகுபாட்டை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்கிறார்.

''நான் மூன்றாம் ஆண்டு மாணவன். மூத்த மருத்துவர்களுடன் அறுவை சிகிச்சை செய்ய நான் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், நான் எப்போதும் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன்'' என்கிறார் அவர்.
''நான் ஒரு அடிமையாக நடத்தப்பட்டேன், அறுவை சிகிச்சை அரங்கிற்கு வெளியே காவலாளி போல நிற்க கட்டாயப்படுத்தப்பட்டேன். என்னைத் தவிர அனைத்துப் பயிற்சி மருத்துவர்களும் கருத்தரங்க வகுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டனர்'' என்கிறார் மாரிராஜ்.
கடந்த ஜனவரி 5-ம் தேதி முதல் தான் கிசிச்சை பெற்று வருவதாகவும், திங்கட்கிழமை முதல் தனக்கு சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் நிறுத்திவிட்டனர் என்கிறார் மாரிராஜ். ''எனக்குச் சிகிச்சையும், உணவும் கொடுக்கப்படவில்லை. இங்கு பணியில் இருக்கும் போலீஸாரே எனக்கு உணவு ஏற்பாடு செய்கின்றனர்'' எனவும் கூறுகிறார்.
மாரிராஜின் மூத்த சகோதரர் ஜப்பானில் ஒரு விஞ்ஞானியாக உள்ளார். இவரது இளைய சகோதரர் தமிழ்நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார்.
தன் மகனுக்கு நிகழ்த்தப்பட்ட பாகுபாடு குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரிராஜின் அம்மா இந்திரா புகார் அளித்தார்.
தேசிய குற்ற ஆவணத்தின் 2016 பதிவின்படி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றங்கள் மற்றும் அட்டூழியங்கள் நடத்தப்படும் பத்து மோசமான மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. கடந்த சில வருடங்களாக இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்கு எதிராகக் குற்றங்கள் அதிகரித்து வருவதைப் பதிவுகள் காட்டுகின்றன.
குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு
புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது பேரும் அந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஜனவரி 10 ஆம் தேதி குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த விஷயம் தலைமை நீதிபதி ஜேபி பார்டிவாலா முன்பு நிலுவையில் உள்ளது.
தள்ளுபடி செய்யக்கோரும் மனு குறித்து அம்மாநில தலித் செயற்பாட்டாளர்கள் பேசுகையில் காவல்துறையினரை குற்றம் சாட்டியுள்ளனர். நகரத்தைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளர் கண்டிலால் பர்மார் பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசுகையில் அகமதாபாத் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதை தாமதப்படுத்தியதால் சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுக நேரம் கிடைத்ததாக கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












