You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜஸ்தானில் `லவ் ஜிஹாத்' - முஸ்லிமை கொன்று எரித்த இந்து இளைஞர் கைது
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ,மதத்தின் பெயரால் ஒருவரை கொன்று எரித்து, பின்னர் அதனை வீடியோவாக பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு வீடியோவில், கொலை செய்த அந்த நபர் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களின் பெருமையை பாதுகாக்கவே கொலை செய்ததாக கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் முஸ்லிம் என்றும், கொலை செய்தாக குற்றம்சாட்டப்படும் சந்தேக நபர் இந்து என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதையடுத்து ராஜஸ்தானில் சில பகுதிகளில் இணையதள சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் இந்த வீடியோவை பகிர்வதை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட காவல் துறையினர் அதிக அளவில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைத் தாக்குதல் எப்போது நடந்தது என தெளிவாக தெரியவில்லை.''எங்களது நாட்டில் லவ் ஜிகாத் செய்ய முயன்றால் இது போன்ற நிலை தான் உங்களுக்கு ஏற்படும்'' என அந்த வீடியோவில் சந்தேக நபரான சம்பு லால் முஸ்லிம்களை எச்சரித்திருக்கிறார். '
லவ் ஜிகாத் எனும் வார்த்தையானது அடிப்படைவாத இந்துமத குழுக்களால் பயன்படுத்தப்படுகிறது.
முஸ்லிம் இளைஞர்கள் காதல் என்ற பெயரில் இந்து மத பெண்களை மயக்கி மதமாற்ற சதி செய்வதாக அந்த குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.
மூத்த காவல்துறை அதிகாரி ஆனந்த் ஸ்ரீவஸ்தவா, பிபிசி ஹிந்தி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம் பேசுகையில் அந்த சந்தேக நபர் வெறுக்கத்தக்க பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக கூறியுள்ளார்.
கொலை செய்த சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்ததில்லை என்றும் அவர்களிக்கிடையே தனிப்பட்ட பகை இல்லை என்றும் காவல்துறை நம்புவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட மொஹம்மத் அஃப்ரசூல், உதய்பூர் நகர் அருகே வசித்து வந்தார். அங்கே பத்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
''சம்புலால் குடும்பத்தில் யாருக்கும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே திருமணம் நடக்கவில்லை என நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த வீடியோவில் வன்முறையை தூண்டும் சில விஷயங்களை பேசியிருக்கிறார். எந்த விதமான வன்முறையையும் தவிர்க்க நாங்கள் இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் '' என ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்