தற்கொலையைத் தடுக்கும் மின்விசிறி! `ரகசிய' தொழில்நுட்பம் அறிமுகம்
- எழுதியவர், ஷில்பா கண்ணன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் மாணவர்களில், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதைத் தடுக்க புதியதொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP
அபாய எச்சரிக்கை ஒலி மற்றும் சென்சார் கொண்ட கருவி பொருத்தப்பட்ட மின் விசிறி, 20 கிலோவுக்கு அதிகமான எடையை தாங்காது. இருபது கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட எவரும் மின் விசிறியை பிடித்துத் தொங்கினால், அது விரிந்து கீழே இறங்கிவிடும். இதுதான் அந்தத் தொழில்நுட்பம்.
போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிப்பதற்கு பிரபலமாக விளங்கும் கோட்டா நகரத்தில், மன அழுத்தம் காரணமாக அதிகரித்து வரும் மாணவ தற்கொலைகளை சமாளிப்பதற்காக இந்த கருவி மேம்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர் விடுதிகளில் உள்ள அறைகளில் தொங்கும் மின்விசிறிகளில் தூக்கிட்டு மாணவர்கள் தற்கொலை செய்து வருவது கடந்தகாலங்களில் மிக அதிகளவில் இருந்தது. இதனை கவனத்தில் கொண்டு, எச்சரிக்கை ஒலி மற்றும் சென்சார் கொண்ட இந்தக் கருவியை மாணவ விடுதிகளில் உள்ள மின் விசிறிகளில் பொருத்தும் முறையை கோட்டா மாணவ விடுதி கூட்டமைப்பு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
"கோட்டா மாணவ விடுதி கூட்டமைப்பில் பதிவு செய்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவ விடுதிகளிலும் இந்த ரகசிய கருவியைப் பொருத்துவதை கட்டாயமாக்கி இருப்பதாக, கோட்டா மாணவ விடுதி கூட்டமைப்பின் நிறுவனர்-தலைவர் மணீஷ் ஜெயின் தெரிவித்தார்.
இந்தக் கருவி பொருத்தப்பட்ட மின் விசிறி, 20 கிலோவுக்கு அதிகமான எடையை தாங்காது. இருபது கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட எவரும் மின் விசிறியை பிடித்துத் தொங்கினால், அது விரிந்து கீழே இறங்கிவிடும் என்று அவர் கூறுகிறார்.
அதோடு, உடனே, அபாய ஒலி எழுப்பி அதிகாரிகளை எச்சரித்துவிடும் என்று அவர் சொல்கிறார். குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து இந்த கருவிகள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தக் கருவிகளை பொருத்தும் பணி, சில மாணவர் விடுதிகளில் தொடங்கிவிட்டது. இன்னும் இரண்டு-மூன்று மாதங்களில் அனைத்து மாணவ விடுதிகளிலும் இந்தக் கருவிகளை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துவிடும் என்று சொல்கிறார் மணீஷ் ஜெயின்.
இதைத்தவிர, கோட்டாவில் உள்ள அனைத்து மாணவர் விடுதிகளிலும் தினசரி வருகையை பதிவு செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு இயந்திரம் பொருத்தப்படும். இதிலிருந்து பெறப்படும் தகவல்கள் மாணவர்களின் பெற்றோருக்கும், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் கூட்டமைப்பின் அதிகாரிகளுக்கு கைப்பேசி மூலம் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும்.
"பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு இயந்திரம் நகரின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் 80 முதல் 90 விடுதிகளில் பொருத்தப்பட்டுவிட்டது. எங்கள் கூட்டமைப்பில் 500 முதல் 550 மாணவ விடுதிகள் பதிவு செய்து கொண்டுள்ளது" என மணீஷ் ஜெயின் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP
மேலும், பயிற்சி மையங்கள் மற்றும் விடுதிகள் அமைந்திருக்கும் இடங்கள், நுழைவாயில்கள், சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிகரிக்கும் தற்கொலைகள்
2014 ஆம் ஆண்டில், கோட்டாவில், தேர்வுகளில் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தினால், குறைந்தது 45 மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் (NCRB) -இன் 2014 ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பல வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியிருக்கிறது.
நாடு முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1.75 லட்சம் மாணவர்கள், ஐ.ஐ.டி, ஜி.ஈ.ஈ., நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக கோட்டாவிற்கு வருகின்றனர்.
மன அழுத்தம்
"மாணவர்களிடையே காணப்படும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கான அடிப்படைகாரணத்தை நாம் தீர்க்கவேண்டும். இருந்தபோதிலும், மாணவ விடுதி கூட்டமைப்பால் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. மாணவர்கள் தற்கொலை செய்வதிலிருந்து தடுப்பதற்காக பல்வேறு விதமான முயற்சிகள் எடுப்பது நல்லது," என்றார் கோட்டா மாவட்ட ஆட்சியர் ரவி சுர்புர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












