You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: 82 வேட்புமனுக்கள் ஏற்பு
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த 127 பேரில் 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சரியாக வேட்புமனுக்களைத் தாக்கல்செய்யாத 45 பேரில் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜெயலலிதா மறைந்ததால் காலியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிட நேற்றுவரை 127 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முதலில் தி.மு.கவின் மருது கணேஷ், அதிமுக - புரட்சித் தலைவி அம்மா கட்சியின் மதுசூதனன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், அதிமுக - அம்மா கட்சியைச் சேர்ந்த டிடிவி தினகரனின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது எனக் கோரி தி.மு.கவின் சார்பில் தேர்தல் அதிகாரிக்கு மனு அளிக்கப்பட்டது.
இதனால், தினகரனின் மனு மீது முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டது.
அதன் பின் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தினகரனின் மனு ஏற்கப்பட்டது. அதேபோல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனுவும், பாரதீய ஜனதாக் கட்சி வேட்பாளர் கங்கை அமரனின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.
சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளின் வேட்பு மனுக்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்