You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்.கே. நகர் அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன், திமுக வேட்பாளர் என். மருது கணேஷ்
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து, காலியான சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக வேட்பாளராக என். மருது கணேஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என்று, அக் கட்சியின் பொதுச் செயலர் சசிகலாவின் ஒப்புதலோடு அறிவிக்கப்படுவதாக அக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், திமுக வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அக் கட்சியின் பகுதிச் செயலராக உள்ள என். மருது கணேஷ் என்கிற என்.எம். கணேஷ் திமுக வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று அக் கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே, தேதிமுக வேட்பாளராக மதிவாணன் போட்டியிடுவார் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும், எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவையின் சார்பில் தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக அணியும் வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால், இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
மக்கள் நலக் கூட்டணி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. அந்தக் கூட்டணி தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளார்.
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. முடிவுகள் 15-ம் தேதி அறிவிக்கப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்