இந்திய திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்,தேசியக் கொடியின் படத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தேசிய கொடி

பட மூலாதாரம், AFP

தேசிய கீதம் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுதந்திரம் குறித்த தனிப்பட்ட கருத்தை மக்கள் கடைப்பிடிப்பதை விடுத்து உறுதியான தேசபக்தியை உணர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் இந்தியாவின் 29 மாநிலங்களும் தனித்தனி சட்டங்களை கடைப்பிடிக்கின்றன.

கடந்த வருடம் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கூடாது என்றும் அது குழப்பத்தை உருவாக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தகவல்கள்

தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து எந்த விளம்பர ஆதாயமும் தேடக்கூடாது, தேசிய கீதத்தின் வரிகள் விரும்பத்தகாத பொருட்கள் மீது அச்சிடப்படக்கூடாது என்றும், பிற கலை நிகழ்ச்சிகளின் போது இசைக்கப்படக் கூடாது, அதன் சுருக்கமான பதிப்பையும் இசைக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரக்காலத்திற்குள் இந்த உத்தரவு அமல் படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.