You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணா நூலக சீரமைப்பு பணிகளுக்கு காலக்கெடு விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாகச் சீரமைக்கும் பணிகளை டிசம்பர் 14ஆம் தேதிக்குள் முடிக்காவிட்டால் தாங்களே குழு ஒன்றை அமைக்கப்போவதாக சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் போதுமான பராமரிப்பின்றி இருப்பதால் அதனைச் சீரமைக்க வேண்டுமென ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நூலகத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு தொடர்ந்து கெடு விதித்துவந்தது.
இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி ஏழாம் தேதியன்று நடந்த விசாரணையில், அண்ணா நினைவு நூலகத்தின் நிலை குறித்து அறிந்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை நீதிமன்றம் அமைத்தது.
அந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் தாக்கசெய்யப்பட்டது.
இதையடுத்து, நூலகத்தை ஜூன் 30ஆம் தேதிக்குள் சரிசெய்யும்படி கெடுவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போதும் பணிகள் முடிவடையாத நிலையில், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பணிகளை முடித்து, நவம்பர் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனோன்மணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நூலகம் இப்போதும் சரியாகப் பராமரிக்கப்படவில்லையென்றும் குழந்தைகள் தரையில் அமர்ந்து புத்தகங்களைப் படிப்பதாகவும் புகைப்படங்களைக் காட்டினார்.
இதையடுத்து வரும் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டுமென்றும். இல்லாவிட்டால், நீதிமன்றமே ஒரு குழுவை அமைக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 172 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியன்று திறக்கப்பட்டது.
2011ல் அ.தி.மு.க. தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின் இந்த நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. இந்தத் திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.