துருக்கி நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் பெயர்களை அழித்தது எப்படி?

- எழுதியவர், டாம் பேட்மேன்
- பதவி, பிபிசி நியூஸ், அடனா, தெற்கு துருக்கி
துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர். இப்படி பெயர் தெரியாத சில குழந்தைகளின் பெற்றோர் யார் எங்கே என்பதும் தெரியாத நிலை இருக்கிறது.
இதுகுறித்து துருக்கி பிபிசி செய்தியாளர் டாம் பேட்மேன் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கே அவர் கண்ட காட்சிகளையும், சேகரித்த செய்திகளையும் இங்கே கட்டுரையாக தொகுத்து வழங்குகிறது பிபிசி.
துருக்கியின் அடனா நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்
குழந்தைகள் தங்களக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகள் எவ்வளவு கொடுமையானது என்பதை புரிந்துகொள்ள முடியாத வயதில் இருக்கின்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு ஆறு மாத பெண் குழந்தைக்கு மருத்துவர்கள் புட்டிப்பால் புகட்டிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவளது பெற்றோர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்னும் நூற்றுக்கணக்கான அடையாளம் தெரியாத குழந்தைகள் அங்கே இருக்கின்றனர். அவர்களது பெற்றோர்கள் இறந்திருக்கக்கூடும் அல்லது நிலநடுக்கத்தின் இடர்பாடுகளில் சிக்கி கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கக்கூடும்.
துருக்கியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் அவர்களது குடும்பங்களை சிதைத்தது மட்டுமல்லாமல் தற்போது அவர்களது அடையாளங்களையும் பறித்துக் கொண்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பெண் குழந்தையின் கைகளை மருத்துவர் நர்ஷா கெஸ்கின் இறுகப் பற்றியிருந்தார். அந்த குழந்தையின் படுக்கையில் 'யாரெனத் தெரியாதவள்' (anonymous) என்று ஒட்டப்பட்டிருந்தது.
அவளுக்கு பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன. அவளது கண்களுக்கு கீழே கருத்து போயிருந்தது. முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அத்தகைய நிலையிலும் அவள் எங்களை திரும்பி பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினாள்.
`அவள் எங்கிருந்து கண்டெடுக்கப்பட்டாள், எப்படி இந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் அவளது சரியான முகவரியை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம். அதற்கான தேடல் தொடர்ந்து வருகிறது` என்கிறார் அதனா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவரும், இணை இயக்குனருமான மருத்துவர் கெஸ்கின்.'
இங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான குழந்தைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து இடிந்த கட்டடங்களின் இடர்பாடுகளுக்கு நடுவே மீட்கப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் இந்த அதனா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதற்கு ஒரே காரணம் இந்த மருத்துவமனை கட்டடம் மட்டும்தான் இன்னும் இடியாமல் நின்றுக் கொண்டிருக்கிறது.

இங்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நகரத்தின் பல்வேறு மருத்துவமனைகள் இடிந்து விழுந்துவிட்டது. சில மருத்துவமனைகள் சேதமடைந்து கிடக்கின்றன. அதனால் இந்த அதனா மருத்துவமனை அனைவருக்கும் ஒரு மீட்பு மையமாக மாறிவிட்டது.
நிலநடுக்கத்தால் இஸ்கெண்டிருன் நகரத்தில் இருந்த மருத்துவமனை கட்டடம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. எனவே அங்கே மகப்பேறு சிகிச்சை பிரிவில் புதிதாக பிறந்திருந்த பல குழந்தைகள் அவசர அவசரமாக இங்கே ஒரே மூச்சில் கொண்டு வரப்பட்டனர்.
`தற்போது நாட்டின் பேரிடர் மண்டலம் முழுவதும் தாங்கள் யார் என்ற அடையாளம் தெரியாத சுமார் 260 குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர்` என்று துருக்கியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இன்னும் பல பகுதிகளில் தேடல்கள் தொடர்ந்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கைகள் கணிசமான அளவு உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
மருத்துவர் கெஸ்கினை நான் பின் தொடர்ந்து சென்றபோது மருத்துவமனை முழுவதும் நிலநடுக்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைகாக நிரம்பியிருந்த காட்சிகளை என்னால் காண முடிந்தது. அறுவை சிகிச்சை பிரிவுக்குள் சென்றபோது அங்கே காயமடைந்த குழந்தைகள் பலர் இருந்தனர்.
அங்கே ஒரு பெண் குழந்தை கைகளில் டிரிப்ஸ் ஏற்றப்பட்ட நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். அவளுக்கு தலையில் பலத்த காயங்களும், பல இடங்களில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
அந்த குழந்தை அவளது பெயரை கூறக்கூடிய நிலையில் இருக்கிறாளா என்று நான் மருத்துவர் இலக்னூர் பன்லிசூர் கேட்டபோது,`அவளது கண் அசைவுகள் மற்றும் உடல் சைகைகள் மூலமாகவே தற்போது அவள் சொல்ல வருவதை தாங்கள் புரிந்து கொள்வதாக` அவர் கூறினார்.
இப்படியொரு பயங்கரமான நிலநடுக்கத்தை எதிர்க்கொண்ட அதிர்ச்சியின் காரணமாக இங்கே பல குழந்தைகள் பேச முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு அவர்களது பெயர்கள் தெரியும். ஒருவேளை ஒரு சில நாட்கள் கழித்து அவர்கள் சீரான மனநிலைக்கு திரும்பிய பின் அவர்கள் பேசுவதற்கு முயற்சி செய்யலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான குழந்தைகளின் முகவரிகளை தேட அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் முகவரிகளுக்கு பதிலாக கட்டடங்களின் உருக்குலைந்த நிலைகளே காணப்படுகின்றன. இத்தகைய சூழலில் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளில் 100 பேர் ஏற்கனவே மீட்பு மையத்தினரால் கவனிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது துருக்கியின் சமூக ஊடகங்கள் முழுவதும் இடர்பாடுகளில் சிக்கி தொலைந்துபோன குழந்தைகளின் புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன. அவர்கள் எந்த பகுதியில், எந்த கட்டிடங்களில் வசித்து வந்தார்கள் என்பது குறித்த விவரங்களை பகிர்ந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குழந்தைகளின் அடையாளங்களை கண்டுபிடிக்கும் பணியில் துருக்கியின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயத்தில் அதனா மருத்துவமனையில் காயமடைந்த நபர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கத்தில் மருத்துவர் கெஸ்கின்னும் தனது உறவினர்கள் பலரை இழந்துவிட்டார். தற்போது தனது குழந்தைகளுடன் அதனா மருத்துவமனையில் அவர் வசித்து வருகிறார்.
இதுகுறித்து மருத்துவர் கெஸ்கின் கூறும்போது ` இப்போது எனது குழந்தைகள் என்னிடம் இருக்கின்றனர். அதற்காக நான் கடவுளுக்கு மனதார நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு தாயாக குழந்தைகளை இழந்து தவிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது எனக்கு தெரியும். அதே போல் இந்த சமயத்தில் நாம் திடமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த குழந்தைகளுக்காக இப்போது நாம் மட்டுமே இருக்கிறோம்` என்று கவலையுடன் தெரிவிக்கிறார்.
நிலநடுக்கத்தில் தொலைந்துபோன சிலர் தங்களது குடும்பங்களை தேடி இணைந்து வரும் காட்சிகளையும் நம்மால் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. ஆனாலும் அங்கே பல குழந்தைகள் அடையாளங்களை இழந்து, தாங்கள் யாரென்றே தெரியாத நிலையில் இருக்கின்றனர் என்பதுதான் இன்றைய துருக்கியின் உண்மை நிலை! துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









