தைவானை தனிமைப்படுத்த சீனாவை அனுமதிக்க மாட்டோம்: நான்சி பெலோசி

அமெரிக்க அரசியல் தலைவர்கள் தைவானுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக சீனா தடை விதித்தாலும் அந்த நாடு, தைவானை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி.
ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அங்கமாக தைவானுக்குச் சென்ற நான்சி பெலோசி, இன்று ஜப்பான் தலைநகர் டோக்யோவில் இருக்கிறார். அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சீன எச்சரிக்கையை மீறி தைவானுக்குச் சென்றதால் தமக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள சீன நடவடிக்கை குறித்தும் பேசினார்.
அப்போது அவர், "எங்களுடைய பயண நிரலை வடிமைப்பது சீனா கிடையாது," என்று தெரிவித்தார். முன்னதாக, தைவான் தீவின் வடக்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியில் போர் ஒத்திகையை மீண்டும் தொடங்கியுள்ளதாக சீன ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.விமானப்படை மற்றும் கடற்படையின் போர் தளவாட திறன்களை பரிசோதிக்கும் நடவடிக்கையைக இந்த கூட்டுப்படை ஒத்திகை நடத்தப்படுவதாக சீன சமூக ஊடக தளமான Weibo தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவுக்கான சீன தூதரை நேற்று வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் அழைத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"நான்சி பெலோசிக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளுக்குப் பிறகு, சீன தூதர் குயின் கேங்கை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து பேசினோம்," என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஓர் செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற தூதரை அழைத்து ராஜீய ரீதியிலான எதிர்ப்பை தெரிவிக்கும் வழக்கம், ஆங்கிலத்தில் demarche என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Wikimedia Commons
ஆதரவு கோரும் தைவான் அதிபர்
இந்த நிலையில், தைவான் தலைவர் ட்சாய் யிங்-வென் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் ட்வீட் செய்து சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோரியுள்ளார்.
ஜனநாயக நாடுகளுடன் தைவான் பகிர்ந்து கொள்ளும் மதிப்புகளை தமது ட்வீட்டில் உறுதிப்படுத்தியுள்ள அவர், "ஜனநாயக தைவானுக்கு ஆதரவு தெரிவித்து, பிராந்திய பாதுகாப்பு சூழல் கடுமையாக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆங்கிலத்தில் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "தைவான் மற்றும் சர்வதேச சமூகத்தைப் பொருத்தவரை, ராணுவ அச்சுறுத்தலை வேண்டுமென்ற அதிகரிக்கும் சீனாவின் நடவடிக்கை பொறுப்பற்றது," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முன்னதாக, ஏவுகணை அமைப்புகளை தைவான் தனது எல்லையில் நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கிறது. விமானங்களும் கப்பல்களும் எல்லையை ஒட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன.
எனினும் சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் போரிட தங்களுக்கு விருப்பமில்லை எனவும் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே தைவானைச் சுற்றி சீன கப்பல்களும் விமானங்களும் போர் ஒத்திகையில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.
பெலோசியின் வருகைக்காக சீனா எடுத்து வரும் நடவடிக்கை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்திருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆன்டனி ஃபிளிங்கென் கூறியுள்ளார். கம்போடியாவில் நடக்கும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் அவர் பேசினார்.
அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் (இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் இடம்பெற்ற மக்களவை போன்றது) சபாநாயகரான நான்சி பெலோசி இரு நாள்களுக்கு முன்பு தைவான் சென்றிருந்தார். நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று சீனா எச்சரித்த பிறகும் நான்சியின் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவித்தபடி தைவானைச் சுற்றி போர்ப்பயிற்சிகளை சீனா தொடங்கியது. நேற்றிலிருந்து நடைபெற்று வரும் இந்த ஒத்திகை இரண்டாவது நாளாக தொடர்ந்தது.

ராணுவ விமானங்கள், கப்பல்கள், ஏவுகணைகள் போன்றவை இதில் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையான குண்டுகளைக் கொண்டு இந்தப் போர் ஒத்திகை நடத்தப்படுவதாக சீனா கூறியிருக்கிறது.
தற்போது தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானுக்குச் சென்றிருக்கும் நான்சி பெலோசி, தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது என்று பேசியுள்ளார்.
11 ஏவுகணைகளை வீசிய சீனா
தனது போர்ப்பயிற்சியின் ஒரு பகுதியாக 11 ஏவுகணைகளை தைவானைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் சீனா ஏவியது. அதிக உயரத்துக்குச் சென்று இலக்கி நோக்கி விழும் பாலிஸ்டிக் ரகத்தைச் சேர்ந்தவை இந்த ஏவுகணைகள்.
தைவானின் நிலப்பரப்புக்கு மேலே சில ஏவுகணைகள் சென்றதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வமாக சீனா எதுவும் கூறவில்லை.

பட மூலாதாரம், Getty Images
தைவான் மட்டுமல்லாமல் அருகேயிருக்கும் ஜப்பானுக்கு சீனாவின் போர் ஒத்திகை கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 4 ஏவுகணைகள் தைவானுக்கு மேலே பறந்ததாகவும், 5 ஏவுகணைகள் ஜப்பானின் எல்லைக்கு உள்பட்ட கடல் பகுதிக்குள் விழுந்ததாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான எல்லை எப்படிப்பட்டது?
சீனாவின் பெரு நிலப்பரப்புக்கும் தைவான் தீவுக்கும் இடையேயான தைவான் நீரிணையில் ஒரு மத்திய எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. இதை மீடியன் லைன் என்று கூறுகிறார்கள். சிலர் டேவிஸ் கோடு என்று குறிப்பிடுகிறார்கள்.
1955-ஆம் ஆண்டு இந்த எல்லையை அமெரிக்க கடற்படை வரையறுத்தது. இரு தரப்பும் அந்த எல்லையைத் தாண்டக்கூடாது என்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. அந்த எல்லைப்பகுதியை தற்போது சீன விமானங்களும் கப்பல்களையும் தாண்டியிருக்கின்றன.
தைவான் எங்கே அமைந்திருக்கிறது?
தைவான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான "முதல் தீவு சங்கிலி" (first island chain) என்றழைக்கப்படும் பட்டியலில் தைவான் உள்ளது.
சீனா தைவானை கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என்றும் சில மேற்கத்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தைவான் - சீனா ஏன் பிரிந்தன?
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தைவான் பிரிவு ஏற்பட்டது.
கம்யூனிஸ்டுகள் 1949-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.
இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்கு தப்பி ஓடியது.
தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்போது, தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.
தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.
தைவானான் சீனாவைச் சமாளிக்க முடியுமா?
ராணுவ மோதல் என்று வரும்போது, அது எந்த வகையில் இருந்தாலும், சீனாவின் படைகள் தைவான் படைகளை எளிதில் தோற்கடித்துவிடும்.
அமெரிக்காவுக்கு அடுத்து மற்ற உலக நாடுகளைவிட அதிகளவில் சீனா பாதுகாப்புத் துறைக்காகச் செலவழிக்கிறது. கடற்படையிலிருந்து ஏவுகணை தொழில்நுட்பம், விமானம், சைபர் தாக்குதல்கள் வரை பெரியளவிலான ஆற்றலைப் பெறுவதற்காக, சீனா செலவு செய்கிறது.

சீனாவுடைய ராணுவ சக்தியின் பெரும்பகுதி வேறு இடங்களில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக செயலிலுள்ள பணியாளர்களைப் பொறுத்தவரை, இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.
ஒரு வெளிப்படையான மோதலில், தைவான் சீனத் தாக்குதலின் வேகத்தைக் குறைப்பது, சீன படைகள் தைவானில் கரையிறங்குவதைத் தடுக்க முயல்வது, வெளியிலிருந்து உதவி கிடைக்கும் வரை காத்திருக்கும்போது கொரில்லா தாக்குதல்களை மேற்கொள்வது ஆகியவற்றைச் செய்ய முடியும் என்று சில மேற்கத்திய வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவிடம் இருந்து அந்த உதவி வரலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












