குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

குரங்கம்மை பாதிப்பு பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது.

தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ், "75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன," என்று கூறினார்.

இந்த பாதிப்பால் இதுவரை ஐந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக அளவில் தற்போது இதுபோன்ற இரண்டு சுகாதார அவசரநிலைகள் மட்டுமே அமலில் உள்ளன - முதலாவதாக கொரோனா வைரஸும், இரண்டாவதாக போலியோ மற்றும் அதை ஒழிப்பதற்கான முழு முயற்சியும் உள்ளன.

குரங்கம்மை பாதிப்பை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டுமா என்பதில் அவசர குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்று கூறிய அவர், எவ்வாறாயினும் இந்த பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதால் இது உண்மையில் சர்வதேச கவலைக்குரியது என்ற முடிவுக்கு தாம் வந்துள்ளதாகவும் டெட்ரோஸ் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி குரங்கம்மையால் ஏற்படும் ஆபத்து அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய பிராந்தியத்தைத் தவிர உலகின் மற்ற இடங்களில் மிதமானதாக உள்ளது," என்றும் டெட்ரோஸ் கூறினார்.

இந்தியாவில் மூவருக்கு இதுவரை பாதிப்பு

குரங்கம்மை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் முதலாவதாக குரங்கம்மை பாதிப்பு, ஜூலை 14ஆம் தேதி கேரளாவின் கொல்லத்தில் பதிவானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த அந்த நபருக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டது.

இரண்டாவதாக, துபாயில் இருந்து கேரளத்துக்கு வந்த 31 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு பரிசோதனையில் உறுதியானது. கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் கேரளாவுக்கு வந்த 35 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. மலப்புரத்தை பூர்விகமாகக் கொண்ட அவர், ஜூலை 6ஆம் தேதி கேரளாவுக்கு வந்ததாகவும், அங்குள்ள மஞ்சேரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

தற்போது அந்த நபரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீனா கூறினார்.

அண்டை மாநிலமான கேரளாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டிலும் குரங்கம்மை வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

குரங்கம்மை பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.

இந்த தொற்று பாதித்த மாணவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும்.

காய்ச்சல் ஏற்பட்டதும் தடிப்புகள் ஏற்படும். இவை பெரும்பாலும் முகத்தில் உண்டாகும். இந்த சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் வரும். கடைசியாக சிரங்கு போல உண்டாகி உதிர்ந்து விடும். இந்தக் காயங்களால் தோலில் தழும்பு ஏற்படும்.

14 முதல் 21 நாட்கள் வரை இந்தத் தொற்று, தாமாகவே சரியாகிவிடும்.

எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளில் இது மரணத்தை உண்டாகியுள்ளது.

காணொளிக் குறிப்பு, குரங்கம்மை எப்படி பரவும்? இது தொற்றினால் உடலில் என்ன நடக்கும்?
line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: