அலுவல் நேரத்துக்கு பிறகு ஊழியர்களுக்கு அதிகாரிகள் மெசேஜ் அனுப்ப போர்ச்சுகலில் தடை

பட மூலாதாரம், Getty Images
போர்ச்சுகல் நாட்டில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள 'ஓய்வுக்கான உரிமை' சட்டப்படி வேலை நேரத்துக்குப் பிறகு மேலதிகாரிகள் ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்புவதோ, இ மெயில் அனுப்புவதோ தடை செய்யப்படுகிறது.
வீட்டில் இருந்து வேலை செய்வது அதிகரித்து வரும் நிலையில், அதனை முறைப்படுத்தும் வகையில் அந்நாட்டில் தொழிலாளர் சட்டங்கள் வலுப்படுத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த சட்டம் வருகிறது. வேலை - வாழ்க்கை இரண்டுக்கும் சமநிலை நிலவுவதை மேம்படுத்தும் வகையில் செய்யப்படும் மாற்றம் இது.
இந்த சட்டப்படி, 10க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட வேலை நேரம் தாண்டி தங்கள் ஊழியர்களைத் தொடர்பு கொண்டால் அவை அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.
குழந்தைகள் உள்ள ஊழியர்கள் அலுவலகம் வராமலே வேலை செய்வதை அனுமதிக்கும் வகையில் விதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இதன்படி, தங்கள் குழந்தைகளுக்கு 8 வயது ஆகும்வரை, முன் அனுமதி பெறாமல், கால வரம்பின்றி ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அது மட்டுமல்லாமல், வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால் ஏற்படும் கூடுதல் மின்சார, இணையக் கட்டணங்களை நிறுவனங்கள் அளிக்க வேண்டியிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால் ஊழியர்கள் எதிர்கொள்ள நேரிடும் தனிமையை சமாளிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளும் இந்த சட்டத்தில் அடக்கம். நிறுவனங்கள் இந்த தனிமை சிக்கலைப் போக்க அவ்வப்போது நேரிடையாக பங்கேற்கும் கூட்டங்களை ஏற்பாடு செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படும்.
ஆனால் இந்த சட்டத்தின் சில அம்சங்களுக்கு போர்ச்சுகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, வேலை நேரத்துக்குப் பிறகு, வேலை தொடர்பான சாதனங்கள் அனைத்தையும் அனைத்து வைப்பதற்கான 'டிஸ்கனெக்ஷன் உரிமை'க்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவில்லை.
"தொலைவில் இருந்து வேலை செய்வது முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும். ஆனால், அதன் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது அவசியம்," என போர்ச்சுகல் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் அனா மென்டெஸ் கோடின்ஹோ ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தொழிலாளர் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படுவதால் நிறைய வெளிநாட்டவர்கள் போர்ச்சுகல் வருவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்த டிஜிடல் நாடோடிகளும், தொலைவில் இருந்து வேலை செய்வோரும் வாழ்வதற்குத் தேர்ந்தெடுப்பதற்கான உலகின் சிறந்த இடங்களில் ஒன்று போர்ச்சுகல் என்று நாங்கள் கருதுகிறோம். அவர்களை போர்ச்சுகல் நோக்கி இழுக்க நாங்கள் விரும்புகிறோம்," என்று கோடின்ஹோ தெரிவித்தார்.
தொழில் முனைவோரையும், சுயாதீனமாக வேலை செய்வோரையும் இழுப்பதற்காக தாற்காலிக குடியிருப்போர் விசா வழங்கும் திட்டம் ஒன்றும் போர்ச்சுகலில் உள்ளது.
மெடெய்ரா என்ற போர்ச்சுக்கல் தீவு ஒன்றில் 'டிஜிடல் நாடோடி கிராமம்' ஒன்று உள்ளது. இங்கே, இலவச வைஃபை, அலுவலக மேசை வசதிகள் உள்ளன.
வழக்கமான சுற்றுலா விசாக்களுக்கு பதிலாக 'டிஜிடல் நாடோடி' விசாக்கள் என அழைக்கப்படும் இந்த விசாக்களை வழங்கும் வேறு சில நாடுகளும் உள்ளன. பார்படோஸ், குரோயேஷா போன்றவை அத்தகைய நாடுகளில் சில.
பிற செய்திகள்:
- தீர்மானம் எட்டப்படாததால் நிறைவடையாத COP26 மாநாடு - இழுபறியில் இருப்பது என்ன?
- ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் தீவிரமாகச் செயல்படுவது ஏன்?
- ட்விட்டர் வழியாக ரூ.35 ஆயிரம் கோடி பங்குகளை ஈலோன் மஸ்க் விற்றது ஏன்?
- பருவநிலை மாநாட்டில் நிலக்கரி பயன்பாடு தொடர்பாக சமரசம் - என்னதான் சாதிக்கும் இந்த மாநாடு?
- இலங்கை பட்ஜெட் 2022: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்
- விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் சிறையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












