You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாணவிக்கு முடிவெட்டிய ஆசிரியை; ரூ.7 கோடி கேட்டு தந்தை வழக்கு
பெற்றோரின் அனுமதி இல்லாமல் 7 வயது மாணவியின் தலைமுடியை பள்ளி ஆசிரியை வெட்டியதற்காக ரூ.7.5 கோடி ரூபாய்க்கு இணையான தொகையை இழப்பீடாக கேட்டு அவரது தந்தை வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
அனுமதி இன்றி முடியை வெட்டியதன் மூலம் தனது கலப்பு இன மகளின் அரசியல் சாசன உரிமை மீறப்பட்டிருப்பதாக தந்தை ஜிம்மி ஹாப்மேயர் தொடர்ந்து வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் மவுன்ட் பிளசன்ட் நகரில் உள்ள கனியார்ட் துவக்கப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
பள்ளி நிர்வாகம் மற்றும் இரு ஊழியர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தனது மகளை ஹாப்மேயர் பள்ளிக்கு அனுப்பவில்லை.
இது தொடர்பாக கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட விசாரணையில், தொடர்புடைய ஆசிரியை பள்ளியின் விதிமுறைகளை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவர் இனவெறுப்புடன் செயல்படவில்லை என்றும் தெரியவந்தது.
அனுமதியின்றி மாணவியின் முடியை வெட்டியதற்காக அந்த ஆசிரியை எச்சரிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் தன் பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டது.
என்ன நடந்தது?
இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஏ.பி. நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஹாஃப்மேயர், "ஒரு நாள் பள்ளியில் இருந்து திரும்பும்போது எனது மகளின் ஒருபக்க முடி பெருமளவு வெட்டப்பட்டிருந்தது" எனக் கூறினார்.
"விசாரித்தபோது பள்ளிப் பேருந்தில் வரும்போது கத்தரியைக் கொண்டு உடன் படிக்கும் ஒருவர் தலைமுடியை வெட்டிவிட்டதாகத் தெரியவந்தது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"இரண்டு நாள்கள் கழித்து மற்றொரு பக்கத்தில் இருந்த தலைமுடியும் வெட்டப்பட்டிருந்தது. சீரற்ற வகையில் தலைமுடி காணப்பட்டது."
வகுப்பில் படிக்கும் வேறு யாரேனும் மீண்டும் தலைமுடியை வெட்டி விட்டார்களோ என்று நினைத்ததாக ஹாப்மேயர் கூறினார். மகளிடம் விசாரித்தபோது "சீராக்குவதற்காக ஆசிரியையே முடியை வெட்டியிருக்கிறார்" என்பது தெரியவந்திருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு
இதைத் தொடர்ந்து மிச்சிகனில் உள்ள நீதிமன்றத்தில் இரு நாள்களுக்கு முன்பு ஹாஃப்மேயர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அரசியல் சட்ட உரிமைகள் மீறப்பட்டதுடன், இனப் பாகுபாடு காட்டப்பட்டதாகவும், இன ரீதியாக மிரட்டப்பட்டதாகவும் இந்த வழக்கில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாவட்ட நிர்வாகம் "தங்கள் ஊழியர்களை முறையாகப் பயிற்றுவிக்கவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் தவறியது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் பிரதிவாதிகள் இன்னும் முறையான பதில் எதையும் தாக்கல் செய்யவில்லை. பள்ளி நிர்வாகமும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
பிற செய்திகள்:
- இலங்கை தமிழ் அரசியல் கைதிக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல்? அமைச்சர் மீது என்ன நடவடிக்கை?
- சீனாவை சீண்டும் 'ஆக்கஸ்' திட்டம்: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஒன்று கூடுவது ஏன்?
- ஆரிய இனத்தைத் தேடி சென்னைக்கு வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்
- சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?
- சூரியன் நிரந்தரமாக 'மறையும்': மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்