கமலா ஹாரிஸ் உரை: "போராடினால்தான் ஜனநாயகம் வலுவாக இருக்கும்"

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ்

அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுடன் சேர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியத் தமிழ் மற்றும் கருப்பினப் பூர்வீகம் கொண்டவரான கமலா ஹாரிஸ் தமது உரையைத் தொடங்கும்போது இப்படிக் குறிப்பிட்டார்:

"ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் லூயிஸ் இறப்பதற்கு முன்பு எழுதினார். அமெரிக்காவின் ஜனநாயகம் என்பது உத்தரவாதம் செய்யப்பட்டது அல்ல. ஜனநாயகத்துக்காகப் போராடுவதற்கு நாம் எந்த அளவுக்கு விரும்புகிறோமோ அந்த அளவுக்கே அது வலுவாக இருக்கும் என்பதே அவர் சொன்னதன் பொருள்"

"இதில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் இருக்கிறது. சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு சக்தி இருக்கிறது" என்று பேசிய கமலா ஹாரிஸ், 2020 தேர்தலுக்கான பைடனின் முழக்கமான "அமெரிக்காவுக்கு நீங்கள் புதிய நாளைத் தொடங்கினீர்கள்" என்ற வாசகத்தையும் குறிப்பிட்டு அவர் பேச்சைத் தொடர்ந்தார்.

"நீங்கள் நம்பிக்கையை தேர்வு செய்தீர்கள். ஒற்றுமையை, கண்ணியத்தை, அறிவியலை, உண்மையை தேர்வு செய்தீர்கள். அதனால் நீங்கள் பைடனை தேர்வு செய்தீர்கள்" என கமலா ஹாரீஸ் கூறி உள்ளார்.

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, உரையாற்றுவதற்காக மேடையேறிய கமலா ஹாரிஸ்

மக்களின் ஆராவாரத்திற்கு இடையே உரையாற்றி வரும் இவர் இவ்வாறாக கூறி உள்ளார்.

பைடன் ஒரு ஹீலர் (குணப்படுத்துபவர்) என கூறிய கமலா, கடந்த காலங்களில் தோல்வியை சந்தித்த நபருக்குதான் மக்களின் தேவை குறித்த ஒரு புரிதல் இருக்கும். அந்த புரிதல் ஒரு தேசமாக நம் நோக்கத்தை மீட்டெடுக்க உதவும் என கூறி உள்ளார்.

குடும்பத்தின் மீதான பைடனின் பாசம், அவரது நல் இயல்பு என பல விஷயங்களை பட்டியலிட்டார் கமலா ஹாரிஸ்.

பைடனின் குடும்பத்தைப் பற்றி பேசிய அவர் பின்னர் தம் குடும்பம் குறித்தும் பேசினார். இந்த தருணம் பெண்களுக்கு எப்படியானதாக இருக்கும் என்றும் பேசினார்.

என் அம்மா அமெரிக்காவில் இப்படியான நிகழ்வு நிச்சயம் சாத்தியப்படும் என தெரிவித்தார்.'

ஒரு பெண் துணை அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டிப்பதை குறிப்பிட்டே கமலா இவ்வாறாக பேசினார்.'

தனி மனுசியாக என் அம்மா என்னை வளர்த்தெடுத்தார் அவரை நான் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். இந்த தருணத்தை சாத்தியப்படுத்திய கருப்பின மக்களை, ஆசியர்களை, வெள்ளை இனத்தவர்களை, லத்தீனியர்களை நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என அவர் தன் உரையில் குறிப்பிட்டார்.

இந்த மக்கள்தான் ஜனநாயகத்தின் முதுகெலும்பு. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 19வது சட்டத் திருத்தத்திற்காகப் போராடியவர்கள் அவர்கள். 55 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குரிமைக்காகப் போராடியவர்கள் அவர்கள். 2020தில் புதிய தலைமுறை பெண்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த போராட்டத்தின், இலக்கின் வெளிப்பாடாக இப்போது நான் இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

துணை அதிபராக ஒரு பெண்ணை தேர்ந்து எடுத்ததற்கு பைடனைப் பாராட்டினார் கமலாஹாரிஸ்.

துணைஅதிபராக பதவி ஏற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். நான் கடைசி பெண் அல்ல என அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: