You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆபாசப்பட நடிகர் மீது பாலியல் புகார் - '4,000 பெண்களுடன் தொடர்பு' மற்றும் பிற செய்திகள்
ஆபாசப்பட நடிகர் மீது பாலியல் புகார் - '4,000 பெண்களுடன் தொடர்பு'
அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ரோன் ஜெரேமி, ஒரு 15 வயது சிறுமி உள்பட, மேலும் 13 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் 2004ஆம் ஆண்டு நடைபெற்றன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 67 வயதாகும் ஜெரேமி 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நான்கு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் மற்றும் பாலியல் வல்லுறவு செய்தார் என்று ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆபாசப்படத் துறையில் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவரான ரோன் ஜெரேமி, 40 ஆண்டுகளில் 1,700க்கும் அதிகமான ஆபாசப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 250 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
ரொனால்டு ஜெரேமி ஹயாத் எனும் இயற்பெயருடைய இவர் 25 மற்றும் 30 வயதான இரு பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாகவும் 33 மற்றும் 46 வயதான வேறு இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஜெரேமிக்கு சுமார் நான்காயிரம் பெண்களுடன் முறையற்ற உறவு இருந்ததாகவும், அந்தப் பெண்கள் தாமாகவே விரும்பி இவருடன் பாலுறவு கொண்டனர் என்றும் அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இந்திய ஜிடிபி -23.9% சரிவு - வீழ்ச்சிக்கு எதிராக கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்
இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு -23.9% அளவுக்கு சரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் இது மோசமான சரிவாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே மோசமான பொருளாதார மந்தநிலையை நாடு எதிர்கொண்டு வரும் வேளையில், கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் காரணமாக உள்நாட்டு மொத்த உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டுள்தாகவும் அறியப்படுகிறது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (ஜிடிபி) மதிப்பீடுகளை 2011-12 ஆண்டின் முதலாவது காலாண்டு மற்றும் நடப்பு நிலவரம் ஆகியவற்றுடனும் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் செலவின கூறுகளின் காலாண்டு மதிப்பீடுகளுடன் சேர்த்து வெளியிட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜி: அரசியல் உச்சங்களை தொட்டவர், "பிரதமர்" பதவியைத் தவிர
நவீன இந்தியாவில், இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி அளவுக்கு அரசியல் ஆளுமை கொண்டவர்கள் மிகவும் குறைவானவர்களே. டெல்லி ராணுவ மருத்துவமனையில் இன்று மாலை காலமான பிரணாப் முகர்ஜியின் அளவுக்கு வெற்றியை ஈட்ட வேண்டும் என்பது, இளம் தலைவர்கள் அனைவருக்குமே விருப்ப லட்சியமாக இருக்கும்.
பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பிறகு திங்கள்கிழமை மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, பரிசோதனையின் முடிவு தெரிவிக்கிறது. அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவரே இதை உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விரிவாகப் படிக்க:பிரணாப் முகர்ஜி: அரசியல் உச்சங்களை தொட்டவர், "பிரதமர்" பதவியைத் தவிர
இந்தியா Vs சீனா: தீவிரமாகும் எல்ஏசி பதற்றம் - படைகளை திரும்பப்பெற சீனா நெருக்கடி
இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ மற்றும் வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை மீறி, கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் தங்களை தூண்டும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. ஆகஸ்டு 29 மற்றும் 30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஏற்கனவே இருக்கும் நிலையை மாற்றும் முயற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாகப் படிக்க:இந்தியா Vs சீனா: தீவிரமாகும் எல்ஏசி பதற்றம் - சீனா என்ன சொல்கிறது?
ஐபிஎல் 2020: சுரேஷ் ரெய்னா வெளியேற்றம் - தொடரும் விமர்சனங்கள்
ஐபிஎல் 2020 போட்டி தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெளியேறியது குறித்து பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களாக இந்தியாவுக்கு திரும்புவதாகவும், ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் எனவும் சென்னை சூப்பர் கிங்கஸ் அணியின் CEO கே.எஸ்.விஸ்வநாதன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் சென்னை சூப்பர் கிங்கஸ் அணி, சுரேஷ் ரெய்னா மற்றும் அவரின் குடும்பத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் அந்த டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விரிவாகப் படிக்க:ஐபிஎல் 2020: சுரேஷ் ரெய்னா வெளியேற்றம் - தொடரும் விமர்சனங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: