You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊடக ஆசிரியர்: அவருக்கு ஆதரவாக ராஜினாமா செய்த 70 செய்தியாளர்கள்
எழுபதுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் ஹங்கேரியின் பிரபலமான செய்தி தளமான இன்டெக்ஸ் (Index)-லிருந்து அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி ராஜிநாமா செய்துள்ளனர்.
ஒடுக்க, அழிக்க முயல்கிறது
அரசாங்கம் தங்களது செய்தித் தளத்தை ஒடுக்க, அழிக்க முயல்கிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு.
ஹங்கேரி நாட்டின் முதன்மையான சுதந்திரமான செய்திதளம் இன்டெக்ஸ். இதன் ஆசிரியர் சபோல்ஸ் டல் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டர்.
அரசின் தலையீட்டின் காரணமாகவே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அரசு தங்களது இணையதளத்திற்கு அதீதமான அழுத்தம் தருவதாகவும் அதன் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
பணி நீக்கம் பற்றிய செய்தி வந்த அடுத்த சில மணி நேரங்களில் ஊடக சுதந்திரத்திற்காக ஹங்கேரி தலைநகர் புடாபஸ்டில் பேரணி நடந்தது.
கடந்த பத்தாண்டுகளாக ஹங்கேரியின் ஊடகங்களை, அந்நாட்டுப் பிரதமர் விக்டர் ஓர்பனின் ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.
எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் கணக்கின் படி, ஊடக சுதந்திரத்தில், 180 நாடுகளில் ஹங்கேரி 89ஆவது இடத்தில் இருக்கிறது.
இன்டெக்ஸ் தளத்திற்கு வெளியிலிருந்து அதீதமான அழுத்தம் தரப்படுவதாக சபோல்ஸ் டல் குற்றம்சாட்டி இருந்தார்.
இணையத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றுபவர்கள் பேராபத்தில் இருப்பதாகவும் கடந்த வாரம் வெளியான ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆசிரியரை திரும்ப அழையுங்கள்
ஆசிரியரை மீண்டும் பணியில் அமர்த்துங்கள் என்ற செய்திப் பிரிவின் கோரிக்கையை அந்த தளத்தின் நிர்வாகக் குழு தலைவர் லாஸ்லோ ஏற்க மறுத்ததை அடுத்து, மூன்று முதன்மை ஆசிரியர்கள் உள்ளிட்ட 70 பேர் கடந்த வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்துள்ளனர்.
அந்த தளத்தின் ஊடக சுதந்திரம் ஆபத்தில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை லாஸ்லோ மறுத்தார். செய்தியறையில் உள்ள பதற்றத்தை அவர்கள் தணிக்க தவறிவிட்டார்கள் என லாஸ்லோ குற்றம்சாட்டுகிறார்.
அரசு ஆதரவாளரின் முதலீடு
ஹங்கேரி பிரதமரான விகடர் ஒர்பனின் ஆதரவாளரான மிக்லோஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இன்டெக்ஸ் தளத்தின் 50 சதவீத பங்குகளைக் கைப்பற்றினார்.
அரசுக்கு ஆதரவான TV2 எனும் ஊடகத்தை மிக்லோஸ் நடத்துகிறார். ஒரிகோ எனும் தளத்தை அரசுக்கு ஆதரவாக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.
வெள்ளிக்கிழமை இன்டெக்ஸ் தளத்தின் செய்தியாளர்கள் ஒரு பக்கம் ராஜிநாமா செய்து அலுவலகத்திலிருந்தி வெளியேறிக் கொண்டிருக்க, விக்டர் ஓர்பனின் பிரதான ஆலோசகர் மற்றும் வரலாற்றாசிரியர் மரியாவுடன் மிக்லோஸ் உணவருந்தும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
நெருக்கடியில் ஊடகத்தின் குரல்
"சுதந்திரமான ஊடகமாக திகழ்ந்த இன்டெக்ஸிற்கு ஏற்பட்ட நெருக்கடி என்பது ஹங்கேரிய மக்களுக்கான இழப்பு," என்கிறார் பிபிசியின் ஹங்கேரி செய்தியாளர் நிக்.
எதனை செய்தியாக்க வேண்டும், எப்படி செய்தியாக்க வேண்டும் என அரசின் உத்தரவுக்காகக் காத்திருக்கும் ஒரு நாட்டில், எந்த அழுத்தமும் இல்லாமல் இன்டெக்ஸின் ஊழியர்கள் பணியாற்ற விரும்பினர். அதன் காரணமாகவே அவர்கள் ராஜிநாமாவும் செய்தனர் என்கிறார் நிக்.
நடுநிலையாக நடந்து கொள்கிறோம் எனக் குறைந்தபட்சம் நடிப்பதைக் கூட அந்நாட்டு ஹங்கேரி அரசு ஊடகங்கள் நிறுத்திப் பல நாட்கள் ஆகிவிட்டன என்கிறார் நிக்.
ஹங்கேரியின் முக்கிய இடதுசாரி செய்தித்தாளான நெப்சாபாட்சங் 2016ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது. மற்றொரு தளமான ஒரிகோ 2014ஆம் ஆண்டே அரசின் ஆதரவு தளமாக மாறிவிட்டது.
இன்டெக்ஸ் செய்தியாளர்கள் ஒரு ஃபேஸ்புக் குழுவை அமைத்து அதில் தொடர்ந்து இயங்க முயல்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :