இந்தியா - நேபாளம் எல்லை பிரச்சனை: நேபாள படையினர் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்

- எழுதியவர், சுரேந்திர பால்
- பதவி, பிபிசிக்காக, காத்மண்டுவில் இருந்து
பிகாரின் சிதமார்ஹி மாவட்டத்தில் உள்ள இந்திய - நேபாள எல்லைப்பகுதியில் நேபாள காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பரப்பில் இருந்து நேபாளத்துக்குள் செல்ல முயன்ற சில இந்தியர்களுடன் நடந்த கைகலப்பை அடுத்து ஆயுதமேந்திய நேபாள காவல்துறை அவர்களை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கடத்தல்காரர்கள் என்றும் முதலில் சிறிய எண்ணிக்கையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் பிறகு மீண்டும் பெரிய கூட்டத்துடன் அங்கு வந்ததாக நேபாள தரப்பு கூறுவதாக பிகாரின் சப்தாரி மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரியான மோகன் பகதூர் கூறுகிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்சனை நடக்கும் சூழலில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இந்தியா - நேபாளம் எல்லை பிரச்சனை
உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த திட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை புதன்கிழமைதான் ஒப்புதல் அளித்தது.
அந்நாட்டின் புதிய தேசிய சின்னம் தொடர்பான சட்டத்திருத்த திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
1816 இல் ஆங்கிலேயர்கள் மற்றும் நேபாளம் தரப்பினரிடையே கையெழுத்திடப்பட்ட சுகாலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிம்பியாதுரா பகுதியில்தான் மகாகாளி நதியின் மூலம் இருப்பதாக நேபாள அரசு கூறி வருகிறது.
ஆனால் அதனை ஏற்க மறுக்கும் இந்தியா, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளுக்கு கிழக்கேதான் அந்த நதி உருவாவதாக கூறுகிறது.
இந்நிலையில்தான் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்த திட்டத்திற்கு நேபாளம் நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனை அந்நாட்டு எம்.பி.க்கள் தங்கள் மேஜைகளை தட்டி வரவேற்றனர்.இந்த சட்டத்திருத்தத்தை அந்நாட்டு அதிபர் தேவி பந்தாரி கையெழுத்திட்ட பிறகு அதிகாரப்பூர்வமாகும்.லக

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு இந்திய அரசு பதிலளிக்காமல் இருப்பதற்கு நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.
"எல்லைப் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும், இந்தியாவில் இருந்து எந்த பதிலும் இன்னும் வராதது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா மற்றும் சீனாவால் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை களைய முடியும் என்றால் சீனா மற்றும் நேபாளத்திற்கு இடையேயும் இது சாத்தியம்தான். இந்தியா விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளும் என நம்புகிறேன்" என அமைச்சர் பிரயிப் க்யவாலி தெரிவித்துள்ளார்.
ஆனால், கோவிட் 19 நெருக்கடி முடிந்த பின்னர்தான் எல்லைப் பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இந்தியா கூறிவிட்டது.
வெளியுறவுத்துறை செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே நேபாளம் அழைப்பு விடுத்துள்ளதாக சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு இந்தியாவின் பதில் என்ன என்பது இன்னும் தெளியாக தெரியவரவில்லை.
பின்னணி என்ன?
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
மகாகாளி (சாரதா) நதி தொடங்கும் இடம் தங்கள் நாட்டு எல்லைக்குள் இருக்கிறது என்று நேபாளம்அரசு கூறுகிறது. ஆனால் அதை இந்திய அரசு மறுக்கிறது.

பட மூலாதாரம், RSS
சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை இந்தியா தொடங்கிய 10 நாட்களுக்கு பின்னர் நேபாளம் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த சாலையை இந்தியா திறந்ததற்கு நேபாள வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
மே எட்டாம் தேதி அன்று காலாபானி, குஞ்சி பகுதிகள் வழியாக லிபுலேக் கணவாய் செல்லும் சாலையை இந்திய அரசு தன்னிச்சையாக திறந்த பின்பு காலாபானி மற்றும் லிபுலேக் பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என்றும் கூறிய நேபாள அரசு, நேபாளத்தில் உள்ள இந்திய தூதர் மற்றும் டெல்லியிலுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியோரிடம் தனது கவலைகளை வெளியிட்டிருந்தது.
நேபாள அரசு புதிய வரைபடத்தை அங்கீகரிப்பதற்கு முன் தலைநகர் காத்மண்டுவில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மான எதிர்ப்புக் குரல்களுடன் கூடிய விவாதமும் நிகழ்ந்திருந்தன.












