You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
coronavirus news: தென்கொரியாவில் கொரோனா வைரஸால் முதல் பலி; சீனாவில் தொடரும் மரணங்கள்
சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக தென்கொரியா உள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, தென்கொரியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் தென்கொரியாவில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதன் மூலம், இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 156ஆக அதிகரித்துள்ளது.
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அங்குள்ள வுஹான் நகரத்திலிருந்து சீனாவின் மற்ற நகரங்களுக்கும் பிறகு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியது.
இன்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சீனாவில் 118 பேர் கொரோனாவினால் உயிரிழந்த நிலையில், புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்ட 889 பேரையும் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,465ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,109 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தென் கொரியா எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
தென் கொரியாவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் டேகு மற்றும் சியோங்டோ ஆகிய இரண்டு நகரங்களிலும் "சிறப்பு பராமரிப்பு மண்டலங்கள்" உண்டாக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தென்கொரிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஷின்ச்சியான்ஜி சர்ச் ஆஃப் ஜீசஸ் என தங்களை அழைத்துக்கொள்ளும் கிறிஸ்தவ மதக்குழுவை சேர்ந்த 61 வயதாகும் பெண் ஒருவருக்கு உண்டான கொரோனா தொற்று டேகு நகரில் கொரோனா பரவ காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்தக் குழுவின் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன.
"கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விரைந்து சிகிச்சை கொடுப்பது மிகவும் அவசியமானது" என்று தென்கொரிய பிரதமர் சங் கூறியதாக யோன்ஹாப் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து திரும்பிய தமிழருக்கு கொரோனா சோதனை
சிங்கப்பூரில் இருந்து திரும்பிய தமிழர் ஒருவருக்கு கொரோனா தாக்கம் உள்ளதா என சோதனை செய்வதற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
45 வயதான சந்திரன், சிங்கப்பூரில் சமையல் பணியாளராக வேலை செய்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் இருந்து திரும்பிய சந்திரனுக்கு திருச்சி விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை நடதப்பட்டது.
சோதனையின்போது, அவருக்கு மூச்சு திணறல் இருந்ததாக தெரிவித்ததால், உடனடியாக அவர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
திருச்சியில் முதல் கட்ட சோதனைக்கு பிறகு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சந்திரனின் உடல்நிலை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (டீன்) சங்குமணி, ''சந்திரனுக்கு காய்ச்சல், உடல்வலி மற்றும் சளி இல்லை. இருந்தாலும், அவர் தனக்கு மூச்சு திணறல் இருப்பதாக கூறியதால், அவரை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளோம். அவரது மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் பாதிப்புக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. இருந்தபோதும், அவருக்கு தனி அறை ஒதுக்கி சிகிச்சை அளித்துவருகிறோம்,'' என்றார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் யாருக்கும் இல்லை என்றும் அறிகுறிகள் தெரிந்தால், உடனடி சிகிச்சை அளிக்க மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தனி மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்