You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்னாப்பிரிக்காவில் கறி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு காதலை சொன்னவருக்கு குவியும் வாழ்த்து மற்றும் பிற செய்திகள்
தென்னப்பிரிக்காவில் உள்ள கே.எஃப்.சி உணவகம் ஒன்றில் தனது பெண் தோழியுடன் கோழிக்கறி சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென அதை நிறுத்திவிட்டு தன் தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார்.
அந்த நிகழ்வை அங்கிருந்த கடேகா மலாபோலா என்பவர் பதிவு செய்த காணொளி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் #KFCProposal எனும் ஹேஷ்டேகுடன் பரவியது. அந்த இணையைக் கண்டுபிடித்துத் தருமாறு கே.எஃப்.சி வெளியிட்ட பதிவு 19,000 முறைக்கும் மேல் பகிரப்பட்டது.
பின்னர் அது பூட் ஹெக்டர் என்பவர் நொன்ஹாங்லா எனும் பெண்ணிடம் காதலைத் தெரிவித்த நிகழ்வு என்று தெரிய வந்தது.
இப்போது மிகவும் பிரபலமாகியுள்ள அந்த இணையின் திருமணத்துக்கு பியர், நிகழ்விடம், தேன் நிலவு செல்வதற்கான முன்பதிவு போன்றவற்றை இலவசமாக செய்து கொடுக்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பலரும் முன்வந்துள்ளனர். பலர் திருமணச் செலவுக்கு பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளனர்.
ஒரு இதழ் அவர்களுக்காக இரண்டு பக்க செய்தி வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சாகேஸ் பான்டிவ்னி எனும் பிரபலமான பாடகர் ஒருவர் அவர்கள் திருமணத்தில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்த முன்வந்துள்ளார்.
நரேந்திர மோதி அரசு மீது நேபாளம் கோபத்தில் இருப்பது ஏன்?
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக வரையறுக்கப்பட்டு, இந்தியாவின் புதிய வரைபடம் ஒன்றை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இந்த புதிய வரைபடத்துக்கு நேபாள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அந்த வரைபடத்தில், உத்தராகண்ட் மற்றும் நேபாளத்துக்கு இடையே உள்ள காலாபானி மற்றும் லிபூ பகுதிகள் இந்தியாவுக்குள் அடங்கியதாக அமைந்துள்ளது.
விரிவாகப் படிக்க: நரேந்திர மோதி அரசு மீது நேபாளம் கோபத்தில் இருப்பது ஏன்?
ஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை?
இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த இயலாது என மலேசிய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை மலேசியா அனுப்பி வைக்கும் என மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா கூறியுள்ளார்.
விரிவாகப் படிக்க: ஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை?: இந்தியாவுக்கு விளக்கம் அனுப்ப மலேசியா முடிவு
சென்னை காற்று மாசுபாடு
டெல்லியை உலுக்கிய காற்று மாசுபாடு தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை நகரத்தில் ஒரு சில இடங்களில் புகைமூட்டம் போல தென்பட்ட காற்றுமாசுபாடு பற்றிய படங்களை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து, சென்னை நகரத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
விரிவாகப் படிக்க: சென்னையில் காற்று மாசு திடீரென அதிகரிக்க காரணம் என்ன?
ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இந்திய ஆதரவு உண்டா?
இலங்கை தமிழ் பிரஜையொருவர் கனவில் கூட ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர முடியாது என தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை சர்வதேசமயமாக்கவும், தென்னிலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவுமே இந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விரிவாகப் படிக்க: ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இந்திய ஆதரவு உண்டா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்