பிபிசி 100 பெண்கள் 2019: பட்டியலில் இடம் பெற்ற 7 இந்தியர்கள் யார் யார்?

நட்டாஷா நோயல், யோகா வல்லுநர்.
படக்குறிப்பு, நட்டாஷா நோயல், யோகா வல்லுநர்.

'பிபிசி 100 பெண்கள்' திட்டம் 2013 முதல் ஊக்கம் தரும் பெண்களின் கதைகளை உலக நேயர்களுக்கு வழங்கிவருகிறது.

கடந்த ஆண்டுகளில், பன்முகத் தன்மை கொண்ட வியக்கத்தக்க பெண்களை நாங்கள் கௌரவித்திருக்கிறோம். மேக்-அப் தொழில்முனைவோர் பாபி பிரௌன், ஐ.நா. துணைச் செயலாளர் அமினா முகமது, செயற்பாட்டாளர் மலாலா யூசப்ஜாய், தடகள வீராங்கனை சிமோனே பிலெஸ், சூப்பர் மாடல் அலெக் வெக், இசைக் கலைஞர் அலிசியா கீஸ், ஒலிம்பிக் குத்துச்சண்டை சாம்பியன் நிகோலா ஆடம்ஸ் ஆகியோர் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

இந்த ஆண்டு பிபிசியின் விருது பெறும் தொடர்ச்சி ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2019ல் பிபிசி 100 மகளிர் நிகழ்ச்சி பெண்களின் எதிர்காலம் பற்றியதாக இருக்கும்.

2019 ஆம் ஆண்டுக்கான 100 பெண்கள் பட்டியல் வெளியாகிவிட்டது. பட்டியலில் உள்ள 100 பெண்களில், 7 பேர் இந்தியர்கள்.

ஆரண்யா ஜோஹர், கவிஞர்

ஆரண்யா ஜோஹர், கவிஞர்
படக்குறிப்பு, ஆரண்யா ஜோஹர், கவிஞர்

பாலின சமத்துவம், மன ஆரோக்கியம் மற்றும் உடல் நேர்மறை செயல்பாடு பற்றிய விஷயங்களை வெளிப்படுத்த ஆரண்யா கவிதை பாடுதலை ஓர் ஊடகமாகப் பயன்படுத்துகிறார்.

`அழகிற்கான பிரவுன் கேர்ள்ஸ் வழிகாட்டி' என்ற அவருடைய நிகழ்ச்சியை யூடியூப்பில் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

எதிர்காலம் பற்றிய அவருடைய தொலைநோக்குப் பார்வை:

``வேலை பார்க்கும் துறைகளில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றால் உலக அளவில் ஜிடிபி வளர்ச்சி 28 டிரில்லியன் அளவுக்கு அதிகரிக்கும். உலகில் பாதி மக்கள் தொகையையும் அவர்களுடைய திறமையையும் நாம் எதற்காகக் கட்டுப்படுத்த வேண்டும்? பாலின ரீதியில் சமத்துவமான உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அதில் இருந்து நாம் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்?''

சுஷ்மிதா மொஹந்தி, விண்வெளி தொழில்முனைவர்

சுஷ்மிதா மொஹந்தி, விண்வெளி தொழில்முனைவர்
படக்குறிப்பு, சுஷ்மிதா மொஹந்தி, விண்வெளி தொழில்முனைவர்

`இந்தியாவின் விண்வெளிப் பெண்மணி' என்று புகழப்படும் விண்கல வடிவமைப்பாளரான சுஷ்மிதா இந்தியாவின் முதலாவது விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

பருவநிலை செயல்பாடு வழக்கறிஞரான இவர், விண்வெளியில் இருந்து பருவநிலை மாற்றத்தைக் கண்காணித்துப் புரிந்து கொள்வதற்கு தனது தொழிலைப் பயன்படுத்துகிறார்.

எதிர்காலம் பற்றிய அவருடைய தொலைநோக்குப் பார்வை:

``அடுத்த மூன்று அல்லது நான்கு தலைமுறைகளில் நமது தாய் பூமி வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்காது என்று அஞ்சுகிறேன். பருவநிலை மாற்றம் தொடர்பாக செயல்பட வேண்டிய அவசரத்தை மனிதகுலம் விரைவில் அறிந்து கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.''

வந்தனா சிவா, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

வந்தனா சிவா, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்.
படக்குறிப்பு, வந்தனா சிவா, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்.

1970களில் மரங்களை வெட்டாமல் பாதுகாப்பதற்காக, மரத்தை சுற்றி நின்று மரத்தை கட்டிப் பிடித்துக் கொள்ளும் இயக்கத்தில் ``மரங்கள் மீதுஉண்மையான நேசம் கொண்டவராக'' இருந்தவர்.

இப்போது உலக பிரசித்தி பெற்ற சுற்றுச்சூழல் இயக்க தலைவர், மாற்று நோபல் பரிசு வென்றவர், இயற்கையின் காவலர்களாக பெண்களைப் பார்க்கும் `சுற்றுச்சூழல் பெண் ஆர்வலர்.'

எதிர்காலம் பற்றிய அவருடைய தொலைநோக்குப் பார்வை:

``பேரழிவு மற்றும் சீர்குலைவு நிலையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்தி, நமது பொதுவான எதிர்காலத்துக்கான விதையை விதைப்பவர்களாக பெண்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.''

நட்டாஷா நோயல், யோகா நிபுணர்

நட்டாஷா நோயல், யோகா வல்லுநர்.
படக்குறிப்பு, நட்டாஷா நோயல், யோகா வல்லுநர்.

நட்டாஷா யோகா நிபுணர், யோகா மற்றும் உடல் ஆரோக்கிய பயிற்சி தரும் மாஸ்டராக உள்ளார்.

மூன்றாவது வயதில் தாயை இழந்துவிட்ட நிலையில், குழந்தையாக இருந்தபோதே அத்துமீறலுக்கு ஆளானவர் என்ற முறையில், மன உளைச்சல் நிறைந்த குழந்தைப் பருவம் பற்றி சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவராக, இந்த உடல் ஆரோக்கிய பயிற்சியாளர் இருக்கிறார்.

எதிர்காலம் பற்றிய அவருடைய தொலைநோக்குப் பார்வை:

``ஒவ்வொரு மனிதரும் அதிகாரம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் வாழக் கூடியதாக எதிர்காலம் இருக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கையாக உள்ளது. சம அளவிலான வாய்ப்புகள், சம அளவிலான அடிப்படை உரிமைகள்... ஒவ்வொருவரும் தங்களுடைய உணர்வுப்பூர்வமான அறிவுத்திறனையும், ஐ.க்யூ.வையும் வளர்த்துக் கொள்ள பாடுபடுவது என இருக்கும் என நம்புகிறேன். உண்மையான மனிதர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று அழுத்தமாக, விழிப்போடு நம்புகிறேன்.''

பிரகதி சிங், டாக்டர்

பிரகதி சிங், டாக்டர்
படக்குறிப்பு, பிரகதி சிங், டாக்டர்

படித்துப் பட்டம் பெற்ற டாக்டர் என்ற முறையில் பாலியல் நாட்டமின்மை குறித்து பிரகதி சிங் ஆராய்ச்சியைத் தொடங்கிய போது, பாலுறவு கொள்வதில் தங்களுக்கு நாட்டம் இல்லை என்றாலும், பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்யும் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக நிறைய பேர் அவரிடம் தெரிவித்தனர்.

எனவே பாலியல் உறவு அல்லாத தொடர்புகளை வைத்துக் கொள்ள விரும்புவோரின் சந்திப்புகளுக்கு அவர் ஏற்பாடு செய்யத் தொடங்கினார். இப்போது அவர் இந்தியன் ஏசஸ் என்ற பாலியல் உறவில் நாட்டம் இல்லாதவர்களுக்கான ஆன்லைன் தளத்தை நிர்வகித்து வருகிறார்.

பிபிசியின் 100 பெண்கள்

எதிர்காலம் பற்றிய அவருடைய தொலைநோக்குப் பார்வை: ``குறைந்த `பலம்', அதிக `மன உறுதி' - என்ற நமது பெண்ணியத்தில் ``பெண்மைத் தன்மை'' குணாதிசயங்களை அதிகமாக ஊட்ட முயற்சிக்க வேண்டிய தருணம்.''

சுபலட்சுமி நந்தி, பாலின சமத்துவ நிபுணர்

சுபலட்சுமி நந்தி, பாலின சமத்துவ நிபுணர்
படக்குறிப்பு, சுபலட்சுமி நந்தி, பாலின சமத்துவ நிபுணர்

பெண்கள் குறித்த ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தில் பணியாற்றும் சுபலட்சுமி, ஆசியாவில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் பணிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார்.

பெண் விவசாயிகளின் உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்கள் கல்வியை மேம்படுத்துதல் பற்றி அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

எதிர்காலம் பற்றிய அவருடைய தொலைநோக்குப் பார்வை:

``பெண்களை புறக்கணித்துவிட முடியாத ஒரு எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. விவசாயத் தோட்டங்களில், வனங்களில், தொழிற்சாலைகளில், தெருக்களில், வீடுகளில் அவர்களுடைய உழைப்பு - அனைத்துமே அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படும். பெண்கள் தாங்களாகவே அமைப்பு ரீதியாக இணைவார்கள். ஒட்டுமொத்த பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் மேம்பாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை அவர்களே முன்னெடுத்துச் செல்வார்கள். பெண்களின் உழைப்புக்கு, ஊதியத்துடன் கூடிய மற்றும் ஊதியம் இல்லாத உழைப்புக்கு, முக்கியத்துவம் தரும் வகையில் அரசின் தகவல்களும் கொள்கைகளும் அமையும்.''

பர்வீனா அஹாங்கெர், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர், மனித உரிமை ஆர்வலர்

பர்வீனா அஹாங்கெர், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர், மனித உரிமை ஆர்வலர்
படக்குறிப்பு, பர்வீனா அஹாங்கெர்.

`காஷ்மீரின் இரும்புப் பெண்மணி' என்று பர்வீனா அழைக்கப்படுகிறார். டீன் வயதில் இருந்த அவருடைய மகன் 1990ல், இந்திய நிர்வாகத்துக்கு எதிராக காஷ்மீரில் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது காணாமல் போனார்.

`காஷ்மீரில் காணாமல் போன ஆயிரக்கணக்கான' பேரில் அவரும் ஒருவர் - இதனால் காணாமல் போனவர்களின் பெற்றோர்களின் சங்கம் (ஏ.பி.டி.பி.) என்ற அமைப்பை பர்வீனா தொடங்கினார். தனது மகன் காணாமல் போய் அடுத்த ஆண்டுடன் 30 ஆண்டாகும் நிலையில், தனது மகனை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது என்கிறார் பர்வீனா.

எதிர்காலம் பற்றிய அவருடைய தொலைநோக்குப் பார்வை:

``திணிக்கப்பட்ட நடவடிக்கையால் காணாமல் போதல் நடவடிக்கைக்கு என் மகனை இழந்த சோகத்தால், நீதி மற்றும் பொறுப்பேற்கும் நிலைமையை வலியுறுத்தி போராடும் உத்வேகம் ஏற்பட்டது. உலகை நல்ல இடமாக, குறிப்பாக பெண்களுக்கு நல்ல இடமாக மாற்றுவதற்காகப் பாடுபட வேண்டும் என்பது என்னுடைய விருப்ப லட்சியம். பெண்களின் பிரச்சினைகளுக்கு முதன்மையான முக்கியத்துவம் தர வேண்டியது இன்றைய உலகில் கட்டாயம். குறிப்பாக மோதல்கள் மற்றும் போர் நடைபெறும் பகுதிகளில் உள்ளவர்களுக்கு இது அவசியமானது.''

100 பெண்கள்

டெல்லியில் அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெறும் பிபிசியின் 100 மகளிர் எதிர்கால மாநாடு நிகழ்ச்சியில் இவர்களில் அனைவரையும் அல்லது பெரும்பாலானவர்களை நீங்கள் சந்திக்கலாம்.

பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பெண்களைப் பற்றியும் அறிந்து கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :