You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் - காரணம் தெரியாமல் திணறும் அரசு மற்றும் பிற செய்திகள்
பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் - காரணம் தெரியாமல் திணறும் அரசு
பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முதல் முதலாக பிப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
குழப்பமடைந்த மருத்துவர் இம்ரான் ஆர்பானி குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில் அனைவருக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது. ஏப்ரல் 24ம் தேதி வரை ஒரு சிறு பகுதியில் மட்டும் 15 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தீவிர காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரிடம் செய்யப்பட்ட ரத்த பரிசோதனையில் 607 பேருக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்துள்ளது.
அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். குழந்தைகளின் பெற்றோருக்கு எச்.ஐ.வி இல்லாத போது, குழந்தைகளுக்கு மட்டும் எப்படி பரவியது என விசாரித்து வருகின்றனர்.
"அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது" - ஹுவாவே
ஹுவாவேயின் நிறுவனர் ரென் சங்ஃபே, அமெரிக்கா தங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.சீன அரசு ஊடகத்திடம் பேசிய அவர், சமீபத்தில் அமெரிக்கா விதித்த தடையால் ஏற்பட்ட விளைவுகளை குறித்து பேசிய அவர், எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா.அந்த நிறுவனத்தை தடை செய்யும் அமெரிக்காவின் முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
அருணாச்சலப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் சுட்டுக்கொலை
அருணாச்சலப்பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தில் 'நேஷனல் சோசியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலாந்து' (என்.எஸ்.சி.என்.) அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில், ஒரு சட்டமன்ற உறுப்பினர், அவரது மகன் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.தேசிய மக்கள் கட்சியை சேர்ந்தவரான டிரோங் அபாஹ் (41) , அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு ஹோன்சா சட்டமன்ற தொகுதியின் தற்போதைய உறுப்பினராக உள்ளார்.
விரிவாக படிக்க: அருணாச்சலப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் சுட்டுக்கொலை
இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் ஹாஷிம் பலியானது உறுதி
கொழும்பு - ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹரான் ஹாஷிம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மொஹமத் சஹரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க:இலங்கை குண்டுவெடிப்பில் சஹ்ரான் ஹாஷிம் பலியானது உறுதி
திமுக, காங்கிரஸ் உள்பட 21 கட்சிகள் டெல்லியில் ஆலோசனை, தேர்தல் ஆணையத்திடம் மனு
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடந்தது. இதில் 67.11 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இந்த சூழலில் காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் தில்லியில் அணி திரண்டு தேர்தல் முவுவுகளுக்குப் பின் எவ்வாறு செயல்பட வேண்டுமென விவாதித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்