1891ல் நடந்த கும்பல் கொலைக்கு மன்னிப்பு கேட்கும் அமெரிக்க நகர மேயர் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
11 இத்தாலி - அமெரிக்கர்களை 1891ஆண்டு கொலை செய்ததற்காக மன்னிப்பு கேட்கப்படும் என்று அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் நகரம் அறவித்துள்ளது.
அதில் பாதிக்கப்பட்ட சிலர் போலீஸ் ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதனால் கோபமடைந்த சில இனவாத கும்பல் அவர்களை தாக்கி, பொதுவெளியில் தூக்கிலிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க வரலாற்றில் இதுவே மிகப்பெரிய கும்பல் கொலை சம்பவமாக கருதப்படுகிறது. வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இதற்காக அந்நகர மேயர் லா டோயா மன்னிப்பு கேட்பார். இத்தாலிய - அமெரிக்க கலாசார மையத்தில் இந்த மன்னிப்பு கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்: சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பட மூலாதாரம், ARUN SANKAR
ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது.
அம்பதி ராயுடுவும், ஷேன் வாட்சனும் சென்னையின் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் சென்னை அணி அதிரடி காண்பிக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், ராயுடு ஒரு ரன்னிலும், வாட்சன் 13 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பி சொதப்பலான தொடக்கத்தை கொடுத்தனர்.
அதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், பிராவோவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

கோவை சிறுமி கொலை - "பாட்டி இறப்பை வைத்து நடித்த குற்றவாளி கைது"

பட மூலாதாரம், Getty Images
கோவை துடியலூர் பகுதியில், விளையாடச் சென்ற ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் 15 பேரிடம் விசாரணை செய்து சந்தோஷ்குமார் எனும் 34 வயதாகும் நபர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க : கோவை சிறுமி கொலை - "பாட்டி இறப்பை வைத்து நடித்த குற்றவாளி கைது"

அரசியல் அனுபவமே இல்லாமல் ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபரான ஜூசானா

பட மூலாதாரம், VLADIMIR SIMICEK
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த ஜுசானா காபுட்டோவா, ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்னிறுத்திய வேட்பாளரான மார்ஸ் செஃபோகோவிக்கை வீழ்த்தி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
முன்னதாக, இந்த தேர்தல் நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போர் என்று அவர் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு ஸ்லோவேக்கியாவில் புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த தேர்தல் நடைபெற்றது.
விரிவாக படிக்க : அரசியல் அனுபவமே இல்லாமல் தனது நாட்டின் முதல் பெண் அதிபரான ஜூசானா

மக்களவை தேர்தல்: வயநாடு தொகுதியை ராகுல் தேர்ந்தெடுத்தது ஏன்?
மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
ராகுல் காந்தி தென் இந்தியாவில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற பேச்சு கடந்த சில நாட்களாக இருந்து வந்தது. அது தமிழகமாக கூட இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார்
விரிவாக படிக்க : மக்களவை தேர்தல்: ராகுல் காந்தி வயநாடு தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












