சிரியா போர்: ஐ.எஸ். வசமிருக்கும் கடைசி ஊரில் கடும் சண்டை

பட மூலாதாரம், Getty Images
சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி ஊரில், அந்தக் குழுவுக்கும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சிரியா ஜனநாயக படைக்கும் இடையில் கடும் போர் நடந்து வருகிறது.
சிரியாவின் கிழக்குப் பகுதியில், இராக் எல்லைக்கு அருகே அமைந்துள்ள பாகூஸ் என்ற ஊரில் அந்த சண்டை தற்போது நடந்து வருகிறது.
இந்த கிராமம் அமெரிக்க ஆதரவு பெற்ற படைகளின் வசமானால், 2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் அமைத்ததாக கூறிய கலீபேட் என்ற ராஜ்ஜியம் முடிவுக்கு வந்ததாக, அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் முறைப்படி அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் பகுதியை ஐ.எஸ். இழந்தாலும், இந்தப் பிராந்தியத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்தும் சக்தியுள்ள அமைப்பாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் ஐ.எஸ். நீடிக்கும் என்று நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இதனிடையே பாகூஸில் ஐ.எஸ். அமைப்புடன் நேருக்கு நேர் கடும் மோதல் நடந்துவருவதாக அதனுடன் மோதி வரும் சிரியா ஜனநாயகப் படையின் ஊடக அலுவலகத்தின் தலைவர் முஸ்தஃபா பாலி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் இதோ:
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சிரியா மற்றும் இராக்கில் ஒரு காலத்தில் 88 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கட்டுப்படுத்தி, அப்பகுதியில் இருந்த 80 லட்சம் மக்கள் மீது கொடும் ஆட்சியை செலுத்தி, எண்ணெய், வழிப்பறி, கொள்ளை, கடத்தல் ஆகியவற்றின் மூலம் பல நூறுகோடி டாலர்களை ஈட்டிவந்த ஐ.எஸ். குழு தற்போது சில நூறு சதுர மீட்டர் பரப்பளவுக்குள் சுருங்கிவிட்டது.

பட மூலாதாரம், DELIL SOULEIMAN/AFP/Getty Images
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு (இந்திய நேரம் இரவு 9.30) தொடங்கிய சண்டையில், சிரியா ஜனநாயகப் படை மற்றும் அதன் ஆதரவுப் படைகளின் விமானங்கள் ஐ.எஸ். குழுவின் ஆயுதக் கிடங்குகள் மீது குண்டுமாரி பொழிந்தன. ஐ.எஸ். குழுவின் முகாம் ஒன்று தாக்குதலில் தீப்பிடித்து எரிந்தது.

பட மூலாதாரம், Getty Images
இறுதித் தாக்குதல் தொடங்கிவிட்டதாக சிரியா ஜனநாயகப் படை (சிஜப) தெரிவித்துள்ளது.
மார்ச் 1-ம் தேதி கடும் விமான மற்றும் பீரங்கித் தாக்குதல் நடத்திய பிறகு, ஐ.எஸ். பிடியில் பொதுமக்கள் சிலர் மனிதக் கேடயங்களாக இருப்பதால் தங்கள் தாக்குதல் வேகத்தை மட்டுப்படுத்துவதாக அறிவித்தது சி ஜ ப.
இதையடுத்து கடந்த திங்கள்கிழமை 3,500 பொதுமக்கள் அந்த ஊரில் இருந்து வெளியேறினர். மறுநாள் 500 ஐ.எஸ். படையினர் சரணடைந்தனர்.
புதன்கிழமை மேலும் 2,000 பேர் பாகூஸில் இருந்து வெளியேறினர் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அவர்கள் சிஜப சோதனைச் சாவடியில் சோதிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு அதன் பிறகு அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கப்பட்டது.
அத்துடன் கடந்த ஒரு மாதத்தில் 4,000 ஐ.எஸ். போராளிகள் சரணடைந்துள்ளதாகவும், அவர்களால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த சிரியா ஜனநாயகப் படை போராளிகள் 5 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் சிஜப ஊடக அலுவலகத் தலைவர் முஸ்தஃபா பாலி தெரிவித்துள்ளார்.
இது இறுதிப்போர்தானா?
-குவென்டின் சோமர்வில்லி, பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர்
தற்போது சிரியா ஜனநாயகப் படையின் இலக்கு எளிமையானது. சில கூடார முகாம்கள்தான் அந்த ஊரில் உள்ளன. அவையும் நாலாபுறமும் தரை மற்றும் வான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

பட மூலாதாரம், AFP
சிறிது சிறிதாக தாக்குதலை அதிகரிக்கும் அணுகுமுறையை அந்தப் படை கையாள்கிறது. பகூஸை தாக்குவது, அதன் பிறகு சண்டை நிறுத்தம் செய்து ஐ.எஸ். ஆதரவாளர்கள், பிணைக் கைதிகள், குழந்தைகள் வெளியேறுவதை ஊக்குவிப்பது என்பதாக அதன் அணுகுமுறை உள்ளது.
மேலும் மக்களை வெளியேற்றுவதற்காக ஞாயிற்றுக்கிழமை அங்கே டஜன் கணக்கில் லாரிகள் வந்தன. ஆனால், கொஞ்சம் பேர்தான் வெளியேறி வந்தனர். தற்போது நடப்பது உண்மையில் இறுதிப் போராக இருக்கலாம். அல்லது, மக்களை வெளியேற்றுவதற்கான உத்தியாகவும் இருக்கலாம்.
ஆனால், சண்டை எளிமையாக இருக்காது. நாட்டு வெடிகள் மூலம் ஐ.எஸ். அந்தப் பகுதியையே சல்லடையாக்கி வைத்திருக்கிறது. ஆனால் இன்னமும் அவர்களிடம் வெடிபொருள்களும், ஆயுதங்களும் நிறைய உள்ளன.
எனவே, நீண்ட நாள் எடுக்காவிட்டாலும்கூட, ஐ.எஸ். படையின் கடைசி புகலிடத்தை பிடிப்பதற்கு மேலும் சில நாள்கள் ஆகும். ஐ.எஸ். தலைவர்கள் ஏற்கெனவே அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நீடிக்கும் அச்சுறுத்தல்
அமெரிக்க செனட் சபையில் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட உலக அளவிலான அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் ஐ.எஸ். குழு அச்சுறுத்தலாக நீடிப்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடியாக புதிய பிரதேசத்தைப் பிடிக்க ஐ.எஸ். முயலாமல் போகலாம். ஆனால், சுன்னி முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பேசியும், சமூக ஸ்திரத்தன்மை இல்லாத நிலையைக் காட்டியும், பாதுகாப்புப் படைகள் பரவி இருப்பதாலும் சிறிது காலம் கழித்து மீண்டும் இழந்த பிராந்தியங்களை மீட்டெடுக்க ஐ.எஸ். உறுப்பினர்கள் முயல்வார்கள் என்கிறது அந்த அறிக்கை.
பிற செய்திகள்:
- காதலனை தேட பெண்களுக்கு “டேட்டிங் விடுமுறை”
- உலக முதலீட்டாளர் மாநாடு: ‘புதிய முதலீடுகள் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு’
- தன்னை மீட்க அறிவிக்கப்பட்ட வெகுமதியை தானே வென்ற சிறுமி
- உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸிற்கு உயிர் கொடுப்பாரா பிரியங்கா காந்தி?
- இஸ்லாம் மதத்தை `சீனமயமாக்க' சீனாவின் ஐந்தாண்டு திட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












