You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அல்ஜீரியாவில் அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டம் - யார் இந்த அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா ?
அல்ஜீரியா முழுவதும் வெடித்த தனக்கு எதிரான போராட்டங்களை புறந்தள்ளிய அந்நாட்டின் தற்போதைய அதிபரான அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, வரும் ஏப்ரல் மாதம் நடைபெற்றவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அல்ஜீரியாவையே புரட்டிப்போட்ட போராட்டங்களையும் மீறி, அப்தலசீஸ் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் தான் வெற்றிப்பெற்றால் முழு பதவி காலத்தையும் வகிக்கமாட்டேன் என்றும், புதிய தேர்தலை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அப்தலசீஸ் அறிவித்துள்ளார்.
பிரச்சனைக்கு என்ன காரணம்?
அல்ஜீரியாவில் தற்போதைய அதிபர் 82 வயதாகும் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா. வயது மூப்பின் காரணமாகவும், 2013ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட பக்கவாதத்தின் காரணமாகவும் அப்தலசீஸை பொது இடங்களில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றான உள்ளது.
ஏற்கனவே, நான்கு முறை அதிபராக பதவி வகித்துள்ள அப்தலசீஸ், அந்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றவுள்ள தேர்தலில் ஐந்தாவது முறையாக போட்டியிடக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்கள் கடந்த சில நாட்களாக மிகப் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதிபர் முன்வைக்கும் தீர்வும், மீண்டும் வெடித்த போராட்டமும்
அல்ஜீரியாவை புரட்டிப்போடும் அளவுக்கு நடைபெற்று வரும் தனக்கு எதிரான போராட்டங்களை கண்ட அப்தலசீஸ், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று 10 நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
எனினும் தான் ஐந்தாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் முழு பதவி காலத்தையும் அனுபவிக்கமாட்டேன் என்றும், தான் போட்டியிடாத புதிய தேர்தலை நடத்துவதற்குரிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பேன் என்றும் அறிவித்திருந்தார்.
இருந்தபோதிலும், அப்தலசீஸின் சமரச யோசனையை ஏற்க மறுத்த பல்லாயிரக்கணக்கான அல்ஜீரிய மக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். நேற்றைய தினமே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி தினம் என்பதால் அப்தலசீஸ் போட்டியிடுவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அல்ஜீரியாவில் சட்டப்படி அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர் நேரடியாக வந்து மனுத்தாக்கல் செய்யவேண்டியது அவசியம். ஆனால், தற்போது அப்தலசீஸ் சுவிட்சர்லாந்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் அவர் மனுத்தாக்கல் செய்வதில் சிக்கல் இருந்தது.
எனினும், இதுதொடர்பாக விசாரணை நடத்திய அல்ஜீரியாவில் அரசமைப்பு குழு, அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர் நேரடியாக வந்து மனுத்தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை என்று அறிவித்தது.
இந்நிலையில், மக்களின் போராட்டத்தையும் மீறி அப்தலசீஸ் பூட்டபிலிக்காவின் சார்பாக அவரது தேர்தல் பிரச்சார குழுவின் மேலாளர் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
இது போராட்டங்கள் அசாதாரணமானதா?
ஆம், அல்ஜீரியாவை பொறுத்தவரை மக்கள் பொதுவெளிக்கு வந்து ஒன்றாக போராடுவது என்பது மிகவும் அரிதான ஒன்று.
அல்ஜீரியாவின் அதிபராக அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா பதவி வகித்து வரும் 20 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய போராட்டம் இதுவே.
தான் ஐந்தாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அப்தலசீஸ் அறிவித்தது முதல், அதாவது கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.
ஞாயிறன்று, மக்கள் மீண்டும் தலைநகரான அல்ஜீயர்ஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
யார் இந்த அப்தலசீஸ் பூட்டபிலிக்கா?
கடந்த 1999ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் பதவியை ஏற்ற அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, அந்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்க காரணமான உள்நாட்டு போரை முடிவு கொண்டுவந்தவராக அறியப்படுகிறார்.
நாட்டை நெடுங்காலமாக ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்களுக்கு எதிராக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் 2010ஆம் ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட அரபு வசந்தம் என்ற பெயரில் அரபுலகில் நடந்த கிளர்ச்சியின் தாக்கம் அல்ஜீரியாவிலும் இருந்தது.
அல்ஜீரியாவை பொருத்தவரை உணவுப்பொருள் விலையுயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன. எனினும், போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றான இரண்டு தசாப்தகாலமாக நடைமுறையில் இருந்த அவசர நிலை பிரகடனத்தை அப்தலசீஸ் முடிவுக்கு கொண்டுவந்தார்.
நோயின் தீவிரத்தன்மையின் காரணமாக அப்தலசீஸினால் சரிவர அரசு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்