400 வருட போன்சாய் மரங்கள் திருடப்பட்டதால் கசிந்துருகிய தம்பதி மற்றும் பிற செய்திகள்

ஜப்பான் நாட்டை சேர்ந்த முதிய தம்பதி, தாங்கள் பொக்கிஷமாக வைத்திருந்த ஏழு போன்சாய் மரங்களை திருடிச் சென்ற திருடனிடம், அதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

திருடப்பட்ட மரங்களில் 400 வருட பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று. அந்த மரத்தின் மதிப்பு 90,000 ஆயிரம் டாலர்கள்.

அந்த மரங்கள் காய்ந்து போனால் தாங்கள் பெருந்துயர் அடைவோம் என்றும் எனவே அதற்கு முறையாக நீர் ஊற்ற வேண்டும் என்றும் அந்த தம்பதியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

போன்சாய் மரங்கள் என்பது ஒரு பெரிய மரத்தை போன்று தொட்டிகளில் சிறியதாக வளர்க்க கூடிய மரங்கள். அவை முறையான நிபுணர்களால் வளர்க்கப்பட வேண்டும்.

தள்ளிவிடப்பட்டார் பிபிசி ஒளிப்பதிவாளர்

ஊடகங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தமது கண்டனங்களை தெரிவித்தார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்.

மேக் அமெரிக்கா கிரேட் பிரசாரம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பிபிசி ஒளிப்பதிவாளர் தள்ளிவிடப்பட்டார். இதனை அடுத்து டிரம்ப் இவ்வாறாக கூறி உள்ளார். ஆனால், பிபிசி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை டிரம்ப் சுட்டிக்காட்டவில்லை.

டிரம்ப் ஒரு தீவிரவாதி

டொனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஒரு 'தீவிரவாதிகளின் குழு' என்று விமர்சித்துள்ள வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தங்கள் நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

"வெள்ளை மாளிகையில் உள்ள தீவிரவாதிகள் வெனிசுவேலாவில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த உறுதியேற்றுள்ளனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தியாளர் ஒர்லா குரின் உடனான பிரத்யேக பேட்டி ஒன்றில், மனிதாபிமான உதவிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என்றும், அது தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.

இலங்கை: தங்கள் தாய்நிலத்தை மீண்டும் அடைந்த தமிழ் மக்களின் கதை

கடந்த ஆண்டு, 40 மீன்பிடி படகுகளுடன், வடக்கு இலங்கையை நோக்கி ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் தீவை மீட்பதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த மீட்புப்பயணம் எவ்வாறு எந்த உயிர்ச்சேதமும் இல்லாமல் நடந்தது என்பதை விளக்குகிறார், பிபிசியின் ஆயிஷா பெரேரா.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, வடக்கு இலங்கையின் இரணைமாதா நகரின் அருகில் நின்று கடலைப்பார்த்த யாராக இருந்தாலும், அவர்களுக்கு அந்தக்காட்சி சற்று வியப்பை அளித்திருக்கும்.

திருச்சபையின் பாதிரியார் முதல் மீன்பிடி பணியில் ஈடுபடும் மகளிர், உள்ளூர் ஊடகவியலாளர்கள் என அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து வெள்ளைக்கொடியுடன் படகை எடுத்துக்கொண்டு, இரணை தீவை மீட்கப் புறப்பட்டனர்.

அவர்களின் இலக்கு: கடந்த 25 ஆண்டுகளாக, இலங்கை கடற்படையின் பயன்பாட்டில் உள்ள தங்களின் நிலத்தை மீட்பது.

சிபிஐ இயக்குநருக்கு தண்டனை

முஸாபர்நகர் காப்பகத்தில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் தொடர்பாக முறையான அனுமதியின்றி சிபிஐ-யின் இணை இயக்குநரான அருண் குமார் ஷர்மாவை அந்த வழக்கில் இருந்து மாற்றக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, அவரை இந்த வழக்கில் இருந்து மாற்றியது தொடர்பாக இந்திய மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குனரான நாகேஸ்வர் ராவ் மற்றும் சிபிஐயின் சட்ட ஆலோசகர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

இவர்கள் இருவரும் நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை அங்கே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :