You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சிரியா மீது இஸ்ரேல் இரவு நேரத்தில் வான் தாக்குதல்'
தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சிரியா ராணுவம் கூறியுள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே, இரவு நேரத்தில் பெருத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சிரியா கூறியுள்ளது.
"ராணுவக் கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மூன்று ராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் பெரும்பாலான ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளன," என்று சிரியா ராணுவத்தின் தரப்பில் அந்நாட்டு அரசு ஊடகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தரப்பில் இதுவரை யாரும் காயமடைந்ததாகவோ, சேதம் உண்டானதாகவோ தெரிவிக்கப்படவில்லை.
செவ்வாய் இரவில் டமாஸ்கஸ் நகரின் வான் பரப்பின் மீது நகரும் பொருள் ஒன்று தடுத்து அழிக்கப்படும் காட்சிகளை சிரியா அரசு ஊடகம் வெளியிட்டது.
இந்த வான் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
விமானங்களை வானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை சிரியாவில் இருந்து ஏவப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் உள்ள இரான் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்பின் ராணுவத் தளங்களை, தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காக இஸ்ரேல் இதற்கு முன்பு பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
எனினும், அத்தகைய தாக்குதல்களை நடத்தியதாக அரிதாகவே ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேலின் உள்ள இரானின் அனைத்து பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கடந்த மே மாதம் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இது 2011இல் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பாலத்தீனின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் அந்தத் தாக்குதலை நடத்தியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்